உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 36.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மாயாவியை மயக்கிய மாயக்காரி

முள்ளடர்ந்து பாம்புப்படைகள் நிறைந்திருந்த காட்டு மரமாகிய பிரிட்டனை, ஆர்தர் அதிலுள்ள முட்களை வெட்டி அறுத்து உருப்படுத்திச் சீவி வீணையாக்க முயன்று வந்தார். ஆனால், கட்டையில் உள்ளூரக் கீறல்களிலிருந்த தென்பதை அவர் அறியார். அத்தகைய கீறல்களில் முதன்மை வாய்ந்தவை கினிவீயர் அரசியின் பொய்ம்மையும், அதற்கு இடந்தந்து ஆட்பட்ட லான்ஸிலட்டின் கோழைமையுமே ஆகும்.

இது தவிர, வீணையின் கீறலினுள்ளாக இருந்து அவ்வப்போது வேலை செய்யும் தச்சரையும் கெடுத்து இறுதியில் தலைமைத் தச்சனாகிய மெர்லினுக்கும் வினை வைத்த நச்சரவு ஒன்றும் இருந்து வந்தது. அதுவே கினிவியரின் தோழியாய் அவள் அரண்மனைக்கு வந்த விவியன்' ஆவாள்.

விவியன் வனப்பு மிக்கவள். மென்மை வாய்ந்த சிறிய உருவமுடையவள். குழந்தைகள் பேச்சுப் போல் பசபசப்பும் கவர்ச்சியும் உடைய அவள் சொற்கள் அவள் உள்ளத்திலிருந்து வஞ்சகம், பொறாமை, கொடுமை ஆகிய தீக்குணங்களை முற்றிலும் திரையிட்டு மறைத்து அவளுக்கு ஒப்பற்ற நடிப்புத் திறத்தை அளித்தன. மாசற்ற முனிவரையும் மாசுபடுத்தத்தக்க அவள் நயவஞ்சக நடிப்பில் ஆர்தர் வட்டமேடை வீரர் பலரும் ஈடுபட்டனர். கலஹாட், பெர்ஸிவேல், கெரெய்ன்டு, காரெத் முதலிய சிலர் மட்டும் இதில் முற்றிலும் விலகி நின்றார்கள். ஆயினும் ஆர்தரின் தெய்வீக அரசியிலின் கட்டுப் பாட்டை மேற் பூச்சாகவே மேற்கொண்ட பலர் உள்ளூர அதில் பட்டழிந்தும் வெளித் தோற்றத்தில் மட்டுமே ஆர்தர் வீரராக நாடகம் நடித்தனர்.

இங்ஙனம் ஆட்டையும் மாட்டையும் கடித்த நச்சரவு இறுதியில் ஆர்தரிடமே தன் கோரைப் பல்லைக் காட்டிற்று.