உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 45.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




38

அப்பாத்துரையம் - 45

தனித் தொழில் நடைபெற்ற காலத்தில் உழைப்பாளியே தொழிலின் மூலசாதனங்களுக்கும் உரியவனாயிருந்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அப்போது முதலீட்டின் உரிமையும், தொழிலாளியிடமே இருந்தது. உழைப்பின் உரிமையும் அவனிடமே இருந்தது. சமூகச் சூழ்நிலையில் இன்று முதலாளியின் சரக்கு மதிப்பை வரையறுக்கும் வகையில் இருக்கும் போட்டி அன்றும் இருந்தது. மிகைமதிப்பு அன்று அவனிடமே தங்கியிருக்க முடியும். ஆனால் அது முதலுடையவன் என்ற முறையிலும் அவனிடம் தங்கியிருக்க லாம்; உழைத்தவன் என்ற முறையிலும் அவனிடம் தங்கி யிருக்கலாம்.

கருவிகளின் தேய்மானத்தை நாம் சரக்கு மதிப்பில் சேர்த்துக் கணக்கிட்டோம். இது உண்மையில் கருவிகளின் விலையே ஆகும். உழைப்பாளர் உழைப்பினைக் குறைக்கவே இக்கருவிகளும் இயந்திரக் கருவிகளும் பயன் படுகின்றன. அவற்றில் ஏற்படும் உழைப்புமிச்சம் உண்மையில் தொழிலாளிக் குரியதே. ஆனால் உழைப்பினர் உழைப்பை முதலாளி வாங்கிவிட்டபடியால், அது முதலாளிக்கு உரியதென்பதில் ஐயமில்லை. ஆனால் சமூகம் உழைப்பில் மிச்சம் ஏற்பட்டால், எனினும் அதைத் தொழிலாளிக்கும் தருவதில்லை. முதலாளிக்கும் தருவதில்லை. ஏனெனில் அது உழைப்புக்கு மதிப்புத் தரவில்லை. சமூக உழைப்புக்கு மட்டுமே மதிப்புத் தருகிறது. இயந்திரமும் கருவியும் மனித சமூகத்தில் ஒரு உறுப்பு அல்லவாதலால், அவற்றின் உழைப்புக்குச் சமூகம் கூலியோ மதிப்போ தருவதில்லை. அதனால்தான் இயந்திரத்தின் உழைப்பையோ, அதனால் வரும் உழைப்பு மிச்சத்தையோ நாம் சரக்கு மதிப்பில் காணவில்லை; கணக்கிடவுமில்லை. தேய்மானத்தை மட்டுமே கணக்கிட்டோம்.

ஆனால் தொழிலாளியின் உழைப்புக்குச் சமூகம் தருவது உழைப்பு மதிப்பு மட்டுமல்ல. இயந்திரத்துக்குக் கொடுக்கும் தேய்மான மதிப்பு உண்மையில் இயந்திரத்தின் விலை மதிப்பேயாகும். தொழிலாளிக்கு அவன் உண்டுபண்ணிய சரக்கில் அவன் உழைப்பு மதிப்பு மட்டுமன்றி, இவ்வுழைப்புக்குரிய உடலூக்கத்தின் தேய்மான மதிப்பும் சேர்ந்துள்ளது. இது அவன் உழைத்த உழைப்பு மதிப்பு அல்ல. உழைத்ததனால் அவன் வாழ்நாள் ஆற்றலில் ஏற்பட்ட குறைபாட்டின் மதிப்பேயாகும்.