உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
188 ||

அப்பாத்துரையம் - 6



லேயே அவன் பிறந்தான். வீரமைந்தன் மேனியுடன் மேனியாகவே இதுமுதல் ஹைதரின் புகழ் வளர்ந்தது.

முகமதலியின் சதியால் நஞ்சிராஜன் நிலை இரண்டக நிலையாயிற்று. படைவீரர்கள் ஊதியம் கோரி அமளி செய்தனர். முகமதலியை நம்பியதால் ஆங்கிலேயரும் பிரெஞ்சுக்காரரும் இருவருமே அவன் எதிரிகளாயினர். அத்துடன் மைசூர் அரண்மனையில் அவன் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்தது. அவன் எதிரிகள் மன்னன் காதில் அவனுக்கு எதிராகக் கோள்மூட்டி, மன்னன் சீற்றத்தை வளர்த்தனர். இவ்வளவும் போதாமல் பண ஆசையால் அவனுடன் வந்திருந்த மராட்டியத் தலைவரும் பிறரும் அவனை அச்சுறுத்தினர். இத்தனை இக்கட்டுகளுடன் மைசூருக்குத் திரும்ப மனமின்றி, நஞ்சிராஜன் சத்தியமங்கலம் என்ற இடத்திலேயே தாவனமடித்துத் தங்கினான். ஹைதர் அவனுடனிருந்து தக்க அறிவுரை, உதவியுரைகள் தந்தான்.

இச்சமயம் மைசூரின் நிலையறிந்து, மராட்டியப் பேரரசுத் தலைவனான பேஷ்வா பாலாஜிராவ் நானா, மைசூர்ப் பகுதி மீது படையெடுத்தான். மைசூரை அடுத்த சுரா மாகாணத்தில் நவாப் திலாவர்கான் தலைவனாயிருந்தான். மராட்டியர் அம்மாகாணத்தைக் கைப்பற்றி பலவந்தராவ் என்பவனை அதில் அமர்வித்தனர். திலாவர்கானுக்குக் கோலார்ப் பகுதி மட்டமே விட்டுக் கொடுக்கப்பட்டது. மைசூர் ஆட்சிப் பகுதியிலும் அவர்கள் புகுந்து ஹைதர்படை பற்றிய கவலையின்றிச் சூறையாடினர். அரசன் அவசர அவசரமாக அமைச்சனுக்கு அழைப்பு விடுத்தும், அமைச்சன் வரவில்லை. இறுதியில் அவன் மராட்டியருக்கு ஒரு கோடி வெள்ளி கையுறை தந்து, சிறிது ஓய்வு பெற்றான். ஒரு சில படைப் பிரிவுகளை நாட்டில் விட்டு வைத்து, பேஷ்வா பூனாவுக்குச் சென்றான்.

நஞ்சிராஜ் மைசூருக்கு வரவிடாமல் தடுத்தவர்கள் ஊதியம் வேண்டி அமளி செய்த அவன் படைவீரர்களே. ஹரிசிங் என்பவன் தலைமையில் ஹைதர் இல்லாத சமயத்தில் அவர்கள் நஞ்சிராஜனைச் சிறையிலிட்டு, உணவும் நீரும் அளிக்காமல் வதைத்தனர். இந்நிலையில், நஞ்சிராஜன் தன் வெள்ளிப் பொற்கலங்களை விற்று அவர்களுக்குப் பணம் தரவேண்டிய