உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
190 ||

அப்பாத்துரையம் - 6



முற்றுகையின்போதே, ஆர்க்காட்டு நவாபின் பெயரால் நஞ்சிராஜன் மேல் கடற்கரைப் பகுதியை மீட்க ஹைதரை அனுப்பியிருந்தான். ஹைதர் அப்போது திண்டுக்கல், கோயமுத்தூர், பாலக்காடு, கள்ளிக்கோட்டை ஆகிய பகுதிகளைக் கீழடக்கி, அவற்றின் தலைவர்களிடமிருந்து திறை பிரித்து வந்திருந்தான். இப்போதும் அவர்களிடமே சென்று மறு தவணைத் திறையைப் பெற்று மைசூர் அரசரிடம் காணிக்கையாகத் தரலாம் என்று ஹைதர் அறிவுரை கூறினான்.

ஏமாற்றம், தோல்வி, வறுமை, அவமதிப்பு ஆகிய இருட்படலங்களால் தாக்குண்டு கிடந்த அமைச்சன், தளபதியின் இவ்வறிவுரை ஒளியை ஆர்வத்துடன் அணைத்துக் கொண்டான். அதன் நிறைவேற்றத்தையும் அவனிடமே விட்டான்.

ஹைதர் என்ற பெயருக்குப் புலி என்பதே பொருள். தென் கொங்கு, மலையாளக் கரை மக்கள் அவனைப் புலி என்றே மதித்திருந்தனர். ஆகவே, பெரும்பாலான தலைவர்கள் அட்டி கூறாமல் தம்மாலியன்ற தொகைகளை அவன் முன் கொண்டுவந்து குவித்தனர்.தராதவர்களும் அவன் தாக்குதல் முரசம் காதில் விழுந்தவுடனே பணிந்து, ஒற்றைக்கு இரண்டடையாகப் பரிசில்கள் கொண்டுவந்து கொட்டி அளந்தனர்.

ஹைதர் மூலம் நஞ்சிராஜன் அடைந்த புகழும் பணமும் மைசூரில் மன்னன் சீற்றம் தணித்தன. நஞ்சிராஜன் அனுப்பிய பெருந்தொகையாகிய ஒரு கோடி வெள்ளியை ஏற்று, மன்னன் அவனை மீட்டும் அரசவைக்கு வரவழைத்துக் கொண்டான். ஹைதரும் உடன் சென்று அமைச்சருடன் அமைச்சராக மதிப்புடன் பணியாற்றினான்.

நாஸிர்ஜங்கைக் கொலை செய்யத் தூண்டிய கடப்பை கர்நூல் தலைவர்கள், மேற்கு மைசூர்ப் பகுதியில் குடிமக்களையும் தலைவர்களையும் கிளர்ச்சிக்குத் தூண்டினர். தானைத் தலைவன் கங்காராம் கிளர்ச்சிக்குத் தலைவனாயிருந்தான். ஹைதர் அத்திசையில் கிளர்ச்சியை அடக்க அனுப்பப்பட்டான்.

தன் படைகளுடனே ஹைதர் இரவு பகலாக விரைந்து சென்றான். எதிர்பாராத வகையில் கங்காரம் ஹைதர் படையின் திடீர்த் தாக்குதலுக்கு ஆளானான். கிளர்ச்சிக்காரர் பெரும் பாலோரும் ‘தப்பினோம், பிழைத்தோம்' என்று ஓடினர். ஹைதர்