உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
236 ||

அப்பாத்துரையம் - 6




ஹைதர் மீர்முகமது சாதிக் என்ற இஸ்லாமியப் புலவனைப் பொருளமைச்சனாக நியமித்தான். சாமையா என்ற வீர பிராமண மரபினனைத் தன் உள்நாட்டுக் காவல்படைத் தலைவனாக்கினான்.

தென்னாடெங்கும் இப்போது ஹைதர் புகழ் பரந்தது. தொலை அயல் நாடுகளிலிருந்து வணிகர் குதிரைகளையும் விலையுயர்ந்த பொருள்களையும் விற்க மைசூரை நாடி வந்தனர். அவர்களுடனே வீரர், புலவர், அறச்சிந்தனையாளர் ஹைதரிடம் அலுவல் நாடியோ, பரிசில் அவாவியோ உலக நலத் திட்டங்களில் உதவி கோரியோ மைசூர் வந்து குழுமினர். சூழ்நிலையும் வரலாறும் ஹைதரை மேலும் இயக்கியிராவிடில் ஹைதரின் மீந்த ஆட்சிப் பகுதி அவனை ஒரு அசோகனாக, அக்பராக, ஹாரூன் அல்ராஸ்சிடாக, குலோத்துங்க சோழனாக மாற்றியிருக்கக்கூடும் என்று திடமாகக் கூறலாம். ஆனால், மாறிய நிலையிலும் 1779-ஆம் ஆண்டு இத்தகைய ஆட்சியின் ஒரு சிறு பதிப்பாகவே காட்சியளிக்கின்றது.

1770-ஆம் ஆண்டுக்குள் மைசூர், நிஜாம், மராட்டியர் ஆகிய மூன்று பேரரசுகளையும் ஆங்கிலேயர் ஒருங்கே புண்படுத்திப் பகைத்துக்கொண்டனர். ஆயினும், ஹைதர் தம்முடன் இல்லாமல், மற்ற இரு அரசுகளும் போரில் இறங்க விரும்பவில்லை. ஹைதரோ, மற்ற இருவரையும் நம்பிப் போரில் இறங்கத் துணியவில்லை. இந்நிலை 1780-ஆம் ஆண்டுக்குள் நீங்கிற்று. பிறர் சேர்ந்தாலும் சேராவிட்டாலும் ஆங்கிலேயர் மீது போர் தொடுத்தே தீருவது என்று அந்த ஆண்டில் ஹைதர் துணிந்தான். ஆனால், அதே ஆண்டில் மற்ற இரு அரசுகளும் மனமுவந்து ஹைதருடன் சேர்ந்து ஆங்கில அரசை எதிர்த்த முன்வந்தன.

மராட்டியரிடையே பேஷ்வா ரகோபா பம்பாய் ஆங்கிலேய அரசியலாருடன் 1775-இல் வர்காம் ஒப்பந்தம் என்ற உடன்படிக்கை செய்துகொண்டான். பேரரசு ஒரு கூட்டுறவானதால், அதன் முக்கிய உறுப்பினரும் கூட்டுறவின் அமைச்சரும் மக்களும் இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தபோது, விரைவில் ரகோபாவின் கை வீழ்ச்சியடைந்தது. மராட்டியர் ஆங்கிலேயரை எதிர்க்கத் துடிதுடித்தனர்.