உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 251

படைத்தலைவர், பணித் துறையாளர் ஆகியவர்கள் முகங்களை ஒரு தடவை கண்டதுமே, அவர்கள் தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், அவர்கள் உள்ளத்தின் சிந்தனைகள் ஆகிய அத்தனையையும் அவன் குறித்துணர வல்லவனாயிருந்தான். படைத் துறையில் அவன் அனுபவம் விலைமதிப்பற்ற ஒரு மூலதனமாய் அமைந்தது. ஏனென்றால், அவன் தேர்ந்தெடுத்த படைக்கலங்கள். குதிரைகள், ஆட்கள் எல்லாம் என்றும் தலைசிறந்த தேர்வுகளாகவே இருந்தன.

இவ்வரந்திறமையால், மைசூரின் ஆட்சியரங்கங்களிடையே அவன் ஒரு பெரிய அனுபவ ஆட்சியரங்கமாக விளங்கினான். அவன் கால மன்னர்கள் மட்டுமன்றிப் பல நாட்டின் அறிவுத் துறை வல்லுநர்களும் அவன் இயற்கையறிவாற்றல் கண்டு திகைத்துப் போயினர். ஆங்கிலேயர்களே அதற்குப் பல சான்று கூறுகின்றனர்.

ஹைதர் தன் வாழ்வில் ஒரு மணி நேரத்தைக்கூட வீணாக்கியதில்லை. உழைப்பும் சுறுசுறுப்பும் விடா முயற்சியும் அவனிடம் உச்சநிலையில் இருந்தன. இதன் பயனாகவே, வாழ்நாள் முழுவதும் ஓயாத பேராட்டத்திலீடுபட்டிருந்தும், அவன் அதன் இடைவேளையிலேயே நாட்டாட்சியின் ஒவ்வொரு செயலையும், தன் குடும்பத்தின் நிர்வாக முழுவதையும் தானே நேரிடையாகக் கவனித்துத் திட்டம் செய்ய முடிந்தது. அவன் கண்கூடாக நேரிலிருந்து பார்த்துச் செய்யாத செயல் எதுவும் கிடையாது. அத்துடன், எந்தக் காரியத்தையும் நீளநினைந்து வழுவறத் திட்டமிட்டல்லாமலும் அவன் செய்ததில்லை. உணர்ச்சி, விருப்புவெறுப்பு, கோபம் எதுவும் அச்செயல்களில் இடம்பெறவில்லை.

அவன் தனக்கு உண்மையானவர்களுக்கு, தனக்காக உயிரைப் பாராமல் உழைத்தவர்களுக்குத் தாரளமாக வாரி வழங்கினான். போர்க்களத்துக்குப் படைகளை அனுப்பிவிட்டு அவன் தலைவனாக ஒதுங்கியிருக்கவில்லை. பிள்ளையைக் களத்திற்கு அனுப்பிவிட்டு, அவனையே நினைந்து நினைந்து செயலாற்றும் தாய்போல, அவன் அவர்களுக்கு நினைந்து நினைந்து ஆதரவுகளும் துணையும் செய்தான். நாள் தவறாமல், படைவீரர்களுக்கு மருத்துவ உதவி, பணம், உணவுப்பொருள்கள்