உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 6.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கன்னட நாட்டின் போர்வாள் ஐதரலி

|| 257

முடிந்தது. இந்த இயல்பை அந்த மட்டில் அறியாமல் போனான்” என்றான். இந்த இயல்பான விளக்கம் சமயவாதிகளின் விளக்கத்துக்கு அது பயனாக எழுந்திருக்கக்கூடும் பூசலுக்கும் ஒரு தடையிட்டது.

ஹைதரின் இயல்பான நகைத்திறன், பேச்சுவன்மை, நடுநிலைமை ஆகியவற்றை மேலும் இரு நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.

'அடிமைப் பெண்' என்ற பொருளுடைய 'லௌண்டிகா’ என்ற சொல்லை ஹைதர் அடிக்கடி வழங்குவதுண்டு. அது திட்டுவதற்குப் பயன்படும் சொல்: அருமையாக அழைப்பதற்கும் பயன்படுவது. படைத்தலைவன், அலிஸுமான்கான் ஒரு நாள், 'இந்தச் சொல் கொச்சையானது. ஹைதரைப் போன்ற பெருமன்னன் வாய்மொழியில் இடம் பெறும் தகுதியுடைய தன்று' என்று மெல்லக் கடிந்தான். ஹைதர் நகைச்சுவையுடன் இதற்களித்த மறுப்பு, சமயவாணர் நூலறிவுக்கு மிகவும் இனிதாயிருந்தது. "அன்பரே, என்ன இருந்தாலும் என் போன்றவரும் உம் போன்றவரும் அடிமைப் பெண்களின் மக்கள் தான்! பீடுடை மாதர் பெற்ற திலகங்கள் என்ற பெயருக்குப் பாத்திரமானவர்கள் ஹுசேன் துணைவர்கள் மட்டும்தான் என்பது உமக்குத் தெரியாதா?” என்றான்.

மறைநூலுரை மரபுக்குப் புது வழக்கு அளித்த இம் மறுமொழியின் சுவையில் சமயவாணரைப்போலவே நண்பர்களும் நெடிது ஈடுபட்டு மகிழ்ந்தார்கள்.

தகுதியில் குறைந்த மன்னரைப்போல ஹைதர் முகப் புகழ்ச்சியை விரும்புவதில்லை. முகப் புகழ்ச்சியை நயமாகக் கடிந்து தன் மதிப்புணர்ச்சியைத் தூண்டுவதில் ஹைதர் திறம் பெரிதாயிருந்தது. கீழ் வரும் நிகழ்ச்சி இதற்குச் சான்று. சுரா மாகாணத்தின் தலைநகரில் ஒரு புது மரபு இருந்தது. கல்லறை மாடங்கள் அங்கே வீடுகளின் முன், தெரு நடுவே இருந்தன. அந்நகரத்தை வென்றபின், ஹைதர் இச்செய்தியைச் சுட்டிக் காட்டினான். இதற்கு என்ன காரணம்? என்று நண்பர்களைக் கேட்டான். “மன்னரே, தங்கள் ஆட்சி ஏற்பட்டது கேட்டு, காடாய்க் கிடந்த இந்த இடத்தில் மக்கள் குழுமியுள்ளனர்.