பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 285

ஆரியர்கள் ஓடுகின்றார்களாவென்னும் அநுபவப்போக்கில் வல்லபத்தைக் கண்டுக்கொள்ளலாம்.

இத்தேசத்துள் ஆரியர்களுக்குச் சத்துரு சாதிபேதமற்ற திராவிடர்களேயாகும். திராவிடர்களுக்குச் சத்துரு ஆரியர்களேயாவர். காரணமோவென்னில் ஆரியர்கள் சத்தியதன்மமாம் புத்ததன்மங்களை மாறுபடுத்தி அசத்திய தன்மங்களையும், அசத்திய சாதிவரம்புகளையும் ஏற்படுத்திவந்தகாலத்தில் அசத்தியதன்மங்களையும், அசத்திய சாதி வரம்புகளையும் சகலருக்கும் விளக்கி பொய்ம்மொழிகளை ரூபித்துவந்த திராவிடர்கள் யாவரும் சத்துருக்களானார்கள். அத்தகைய ஆரியர்களின் சத்துருக்களாகிய திராவிடர்களே தற்காலம் சண்டாளர்களென்றும், தீண்டாதவர்களென்றும், தீயர்களென்றும், பறையர்களென்றும் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்திருக்கின்றார்கள்.

இத்தகைய காலத்தில் அன்னியதேசத்தோராம் ஆரியர்களுக்கும் அவர்கள் வாக்கை சிரமேற்றாங்கிநிற்பவர்களுக்கும், செல்ப் கவர்ன்மெண்டென்னும் சுயராட்சியம் அளித்துவிடுவதாயின் சாதிபேதமற்ற திராவிடர்களாம் அறுபது லட்சத்திற்கு மேற்பட்டக் குடிகள் யாவரும் அதோகதியால் மாய்ந்து அடியோடு சாய்ந்துவிடுவார்களென்பது சத்தியம் சத்தியமேயாம்.

நமது கருணைதங்கிய பிரிட்டிஷ் அரசாட்சியார் இந்தியர்மீது கிருபை பாலித்து சுயராட்சியமளிப்பதாயின் அச்சுயராட்சியத்திற்கு உரியவர்கள் திராவிடர்களேயன்றி ஆரியர்களாக மாட்டார்கள். இந்து தேசத்தை சிறப்படையச் செய்தவர்கள் பூர்வ திராவிடர்களே யாகுமென்பதை சரித்திரத்தாற் காணலாம். இந்துதேசச் சிறப்பையும், இந்தியர்களின் ஒற்றுமெயையும் பாழ்படுத்தி சீர்கெடச்செய்தவர்கள் ஆரியர்களே என்பதை அவர்களது அநுபவத்திற் காணலாம்.

ஆதலின் நீதியும், நெறியவும், கருணையும்வாய்ந்த பிரிட்டிஷ் ஆட்சியார் கண்ணோக்கம் வைத்து மற்ற சாதியோர் கல்வியிலும், செல்வத்திலும் மிகுத்திருப்பதுபோல் சாதிபேதமற்ற திராவிடர்களையும் முன்னேறச்செய்து அவர்கள் சுகச்சீரும் அறிவின் விருத்தியும் பெற்றபின்னர் சுயராட்சியம் அளிப்பார்களாயின் சருவ மக்களும் சுகச்சீர் பெற்று நல்வாழ்க்கைப் பெறுவதுடன் பிரிட்டிஷ் ராஜவிசுவாசத்திலும் நிலைத்து மிக்க நன்றியறிதலுள்ளவர்களாவார்கள். அப்போதே பிரிட்டிஷ் ஆட்சிக்குட்பட்ட திராவிடர்களின் சுயராட்சிய சிறப்பு உலகெங்கும் பிரகாசிக்கும். அத்தகையப் பிரகாசத்தால் பிரிட்டீஷ் ஆட்சிக்கும் இணையில்லா ஆறுதலுண்டாம்.

- 4:16; செப்டம்டர் 28, 1910 -


158. பூமியைப் பண்படுத்தி தானியவிருத்தி செய்யும் வேளாளத் தொழிலாளிகளே கவனியுங்கள்

கருணைதங்கிய நமது கவர்ன்மெண்டார் நெல்லிக்குப்பத்திற்கு அடுத்தப் பாலூர் விவசாயப்பண்ணையில் தங்களது விடாமுயற்சியாலும், பொருளுதவியாலும் பூமியைப் பண்படுத்தி நிலக்கடலை, கரும்பு மற்றும் நஞ்சை புஞ்சை தானியங்களை விளைவித்து அவைகள் செழித்தோங்கி வளர்ந்திருப்பதை மற்ற தேசங்களிலுள்ள வேளாளத் தொழிலாளர் வந்து பார்வையிட்டு தங்களுடைய பூமிகளையும் அவ்வகையாகப் பண்படுத்தி அவர்கள் விளைத்து பயிர்செய்துள்ளவாறு செய்து சீர்பெறும்படியான ஏதுக்களைச் செய்திருக்கின்றார்கள்.

விவசாயிகள் இத்தகைய காலத்தை வீண்போக்காது அப்பண்ணைகளுக்குச் சென்று பூமியைப் பண்படுத்தியிருக்கும் வகைகளையும், தானியங்கள் நடவுசெய்திருக்கும் நிலைகளையும், அவைகள் ஓங்கி வளர்ந்திருக்கும் பாங்குகளையும், கண்டுதெளிந்து தங்கடங்கள் பூமிகளையும் அவ்வாறு விருத்தி செய்வரேல் இத்தேசத்துள் பஞ்சமென்னும் ஐந்துவகைக் குறைகள் நேராதென்பது திண்ணம்.