பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/509

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரசியல் / 461


அத்தகைய மேலான உபகாரச்செயல்களிலும் பெரியசாதியென வேஷமிட்டுள்ளோர் நுழைந்துகொண்டு தாங்கள் மிக்கவூக்கமுடன் உழைப்பது போல அபிநயங்காட்டி தங்கள் சுயப்பிரயோசனத்தைப் பார்த்துக் கொள்ளுகின்றார்கள் அன்றி பூமிகளின் விருத்திகளையும் உழைப்பாளிகளின் சுகத்தையுங் கருதுவார்களில்லை. யாது காரணமென்னில் தங்கள் தங்கள் சாதிவேஷங்களை நூதன வேஷங்களென்று பலருமறிய பறைந்து வந்தவர்களைப் பறையர் பஞ்சமரெனத் தாழ்த்திப் பாலகாலமாக நசித்து வருகின்றவர்களாதலால் கருணைதங்கிய ராஜாங்கத் தோன்றியும் அவர்களது கடுஞ்சினம் மாறாது பூமியின் உழைப்பாளிகளை வதைக்கும் வழிகளையே தேடிக்கொண்டு வருகின்றார்கள்.

இத்தகையக் கேடுபாடுகளையுங் கருணைதங்கிய ராஜாங்கத்தார் கண்ணோக்கி பூமிகளுக்கு எடுக்கும் முயற்சியுடனும், அதற்காய வேணப் பணங்களையுங் கருவிகளையும் உதவுவதுடனும், உழைப்பாளிகளாம் ஏழைமக்களையும் அவர்கள் சுகத்தையும் சற்று கண்ணோக்குவதாயின் பூமியின் விருத்திகள் மேலாய பலனைத்தரும். ஏராளமாயப் பணத்தை விரயஞ்செய்துவரும் இராஜாங்கத்தோருக்கும் ஆனந்த முண்டாம். சாதித் தலைவர்களாலும் சாதியென்பதை மெய்யென்று இருப்போர்களாலும் இத்தேசத்தின் வித்தியாவிருத்தியும் விவசாய விருத்தியும் பாழடைந்துபோய் இருக்கின்றபடியால் கருணை தங்கிய ராஜாங்கத்தார் அத்தகை பேர்களையே தங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாகவைத்துக்கொண்டு செய்வதாயின் எளிதில் சித்தி பெறமாட்டாது. எவரையும் நம்பாது தாங்களே முயன்று தங்கள் பார்வையையே வைத்து வித்தியாவிருத்தியையும் விவசாயவிருத்தியையும் பயன்பெறச் செய்யும்படி வேண்டுகிறோம்.

- 6:43; ஏப்ரல்2, 1913 -


287. மநுக்களை மநுக்களாக நேசிக்காத தேசம் மகிழ்ச்சியும் புகழ்ச்சியும் பெறுமோ

முக்காலும் பெறாவென்பது திண்ணம். அதாவது ஓர் மனிதன் தன்னைத்தானே பெரியசாதியோனென உயர்த்திக்கொண்ட கர்வத்தினாலும் தம்மெய் ஒத்த மனிதனை மனிதனாக நேசிக்காத பொறாமெயாலும் நமது முன்னோர்களாகியப் பெரியோர்களை தங்கள் பகையாலும் அறிவின்மெயாலும் மக்களுள் மக்களை நேசிக்காது புறம்பாக்கிவருகின்றார்கள். அவ்வகை நாமுஞ் செய்யலாகாது என்னும் அறிவின்மெயாலும் தங்களால் தாழ்ந்த சாதியோனென்று தாழ்த்தப்பட்டுள்ள ஓர் மனிதன் அருகில் வந்துவிடுவானாயின் அவனைக் கண்டவுடன் துள்ளித்துடித்து தூர அகன்றோடுகிறான். அதனால் அவனுக்குள்ள மநுமக்களை மநுமக்களாக நேசிக்காத பொறாமெயும் பற்கடிப்பும் வஞ்சினமும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகின்றபடியால் மற்றவன் அவனைக் கண்டவுடன் மகிழவும் புகழவும் ஏதுவுண்டாமோ இல்லை, இகழ்வதே காட்சியாகும்.

தாழ்ந்த சாதியோனெனத் தாழ்த்தப்பட்டுள்ள மனிதன் சற்று விவேகியாயிருப்பானாயின் துள்ளித்துடித்துத் தூரவோடும் மனிதனை சற்று உற்றுநோக்கி நாம் இவனிலும் சீலமும் சுத்தமும் பொருந்த நிற்க நம்மெய்க் கண்டவுடன் தூரவிலகியோடியதைக் காணில் இவன் முன்ஜெனனத்தில் குதிரை, மாடு முதலிய மிருகமாயிருந்து இச்ஜெனனத்தில் மநுடனாகத்தோன்றியும் முன்ஜென்மத்தில் மனிதனைக் கண்டவுடன் தூர விலகியோடும் பயமானது மாறாது மனித ஜெனனத்திலும் பூர்வச்செயல் தொடர்ந்தேநிற்கின்றதென்று எண்ணி நகைத்துக்கொண்டே போய்விடுகிறான். அதனால் ஏதேனும் மகிழ்ச்சியும் புகழ்ச்சியுமுண்டோ, இல்லை.

மற்றுமோர் விவேகியைக்கண்டு தாழ்ந்தசாதியோனென்று எண்ணித் தீண்டலாகாதெனத் தூர ஓடுவானாயின் விவேகியானவன் சற்று அவனை உற்று நோக்கி நம்மெய்க் குடியன் என்றெண்ணி தூரவோடி இருப்பானாயின்