பக்கம்:அயோத்திதாசர் சிந்தனைகள் 1, ஞான அலாய்சியஸ்.pdf/762

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

734 / அயோத்திதாசர் சிந்தனைகள்


அதனால் அவர்களது புத்தியின் விருத்தியும் பாழடைந்துபோகின்றது. நூதனசாதிபேத வேஷத்தால் பிச்சையிரந் துண்போரை பெரியசாதியோரென்றும், பூமியை உழுதுண்போரை சிறிய சாதியோரென்றும், குடிகளிடம் பொய் சொல்லியும் வஞ்சித்தும் சீவிப்போரை பெரிய சாதியோர் என்றும், தேகத்தை வருத்திக் கஷ்டப்பட்டு சீவிப்போரை சிறியசாதியோரென்றும் வகுத்துள்ளவைகளே புத்தியின் விருத்திக் கேடாக முடிந்து பொறாமெ விருத்திப் பெருகி தேசத்தையும் தேசமக்களையும் சிறப்படையாமற் செய்துவிடுகின்றது. ஆதலின் தேசமனுக்கள் யாவரும் சாதிவேஷ சமயவேஷ விருத்தியிற் பழகாமல் பிரிட்டிஷ் துரைமக்களாம் மேன்மக்களின் புத்தியை அநுசரித்து புத்தியின் விருத்தியிற் பழகுவதே அழகாம்.

வித்தையை ஆராய்ந்தோம் புத்தியை ஆராய்ந்தோம் இனி ஈகையை ஆராய்வோமாக.

- 7:6; சூலை 18, 1913 -

இனி ஈகை என்பது யாதெனில் யாதொரு தொழிலுஞ் செய்ய சக்தியற்ற ஏழைகளுக்கு அன்னம் ஈதல், பிணியுற்று மெலிந்த ஆதுலர்களுக்கு மருந்து ஈய்தல், உடையற்ற எளியோருக்கு உடைகள் ஈய்தல் இல்லமற்ற ஏவலருக்கு இடமொன்று, ஈதல் உண்ண சோறற்று மடிவோருக்கு அன்னம் ஈதலாகிய செயல்களுக்கே ஈகையென்று பெயர். இத்தகைய ஈகை குணங்களில் ஒன்றேனும் ஓர்மனிதனுக்கு இல்லாவிடில் அவன் மனுபிறவியாகான் என்பது கன்மபாகை விதியாம். ஆதலின் மனிதனாகத் தோன்றினோனுக்கு ஈகையின் குணம் இருந்தே தீர வேண்டும். இதற்குப் பகரமாய் நம்மெ யாண்டுவரும் பிரிட்டிஷ் ஆட்சியின் துரைமக்களால் செய்துவரும் தன்ம வைத்தியசாலைகளும் பஞ்சகாலத்தில் தன்ம அன்னசாலைகளும் குடிகளின் இடுக்கங்களை நீக்கும் காவலாளர் கட்டங்களும் வைத்துக் காத்துவருவதே போதுஞ் சான்றாம்.

இவைகளை அநுசரித்தே பூர்வபௌத்தர்கள் கோதானம், பூதானம், வஸ்திரதானம், அன்னதானம் மற்றும் உண்டானவைகளில் நிதானமே பெரிதாகக் கொண்டு சங்கஞ்சேர்ந்து சமண நிலையுற்று புலன் தென்பட்போர்களாம் தென்புலத்தோர்க்கே முதலாவது ஈகையாம் தானமளித்து மற்றும் ஏழைகளை பேதமின்றி காத்து ரட்சித்துவரும் ஈகையின் குணத்தையே மிக்க உறுதியாகப்பற்றி தானத்தைப் பரவச் செய்துவந்தார்கள். அத்தானமாம் வித்தியா தானம் கைத்தொழில்தானம், ஞானதானம், நீதியின் தானம், பெற்ற மக்கள் யாவரும் குருவிசுவாசம், இராஜவிசுவாசப்பயனால் மக்கள் விசுவாச ஒற்றுமெயுற்று ஒருவர் கற்றக் கல்வியை மற்றொருவருக்குக் கற்பித்தலும், ஒருவர் கற்ற வித்தையை மற்றொருவருக்குக் காட்டுவித்தலும், ஒருவர்கற்ற ஞானத்தை மற்றவருக்குப் போதித்தாலும், ஒருவர்கற்ற நீதியை மற்றவரும் பரிபாலிக்கச்செய்தலுமாய ஈகையின் குணத்தால் சகல மக்களும் விவேகவிருத்திப்பெற்று தேசம் சீரும் சிறப்பும் பெற்றிலங்கியது.

அத்தகைய ஈகையின் பெயரும் அதன் செயலுமற்ற தற்கால நூதன சாதிகள் வேஷத்தாலும், நூதன மதங்களின் மாறுபாடாலும் ஒற்றுமெயென்னும் பெயரற்று, வேற்றுமெயென்னும் பிரிவுற்று, ஒரு சாதியோனைக்கண்டால் மற்றொரு சாதியான் சீறுதலும், ஒருமதத்தானைக் கண்டால் மற்றொருமதத்தான் முகம் மாறுதலுமாகியச் செயல்களுண்டாகி யாவருக்கு ஈதல் வேண்டும், யாவருக்கு ஈதலாகாது என்னும் உணர்ச்சியற்று தானங்களின் நிலைகளையே மறந்து கருணையென்பதற்று இன்னசாதியோனுக்கு அன்னமிடப்படாது இனிய சாதிக்கே அன்னமிட வேண்டுமென்னும் பொய்ப் போதனைகளை நம்பிக்கொண்டு ஏதுமற்ற ஏழைகளுக்கு அன்னமிடாது பொருள்பெற்ற தடிச்சோம்பேறிக்கே அன்னமிட்டுக் கொழுக்கவைக்கின்றபடியால் தேசமும் சிறப்பழிந்து தேசமக்களும் சீர்குலைந்துபோவதற்கு ஏதுவாகிவிட்டது. ஆதலின் தேசமக்கள் யாவரும் மனிதனை மனிதனாகப் பாவித்து ஈகையைப் பொதுநிலையிலுன்னி சகலமக்களும் முன்னேறவேண்டுமென்னுங் கருணையை வளர்ப்பார்களாயின் வித்தை, புத்தி, ஈகை, மூன்றும் சிறப்புற்று தேசங்