பக்கம்:அறிஞர் அண்ணா நினைவஞ்சலி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

171



சிறுவர்களின் கோரிக்கைக்கும் - சூழ்நிலை என்ற சுழலுக்கும் - நான் பலியாகாமுன், உன் உள்ளக் கடலில் - என்னை உலாவவிடு.

தாயே! ஆடி மாதம் ஒருநாள்! உன்னுடைய பிறந்த நாள் வந்தது!

அப்போது உன் அழகைப் பார்க்கப் பொன்னிப் பெருக்கெடுத்து வரும்போது நானும் வந்தேன்.

கோவலனையும் - மாதவியையும் வெட்டிப் பிரித்த சில மஞ்சள் பூக்கள்; வரலாற்றிலே செய்த வஞ்சத்தை மறைத்துக் கொண்டு, அதே காவிரியில் மிதந்து சென்றன!

இந்தப் பூக்கள், சிலப்பதிகார இசை நாடகத்தால் - கெட்ட பெயர் பெற்ற பூக்கள் அல்ல.

அம்மா! உன் பிறந்த நாளுக்காகச் சூடப்பட்ட, தார் சரத்திலிருந்து உதிர்ந்து விழுந்தவை.

நீ, குஞ்சரத்தின் மீதேறி வந்தாய், உன்னைப் பார்த்து கை எடுக்காதவன் முடவன்தான், உன் அழகைப் பார்க்காதவன் குருடன்தான்!

கரிய மேகத்திற்குக் காலும் வாலும் வைத்தால், நீ ஏறி வந்த கரிய யானைபோல் இருக்கும்.

அந்த மேகங்கள், அப்போது ஒன்றும்கூட இல்லாத காரணத்தால் - வானம் மனப் பெண்ணுக்காக விரிக்கப்பட்ட பாயைப் போல் இருந்தது.

உன் அழகை, அங்கே வந்து பார்க்கலாம் என்று, ஓடோடி வந்தேன். அதற்காக நட்டாற்றைவிட்டு கரைக்கே வந்தேன்.

என் தாயின் அழகில் இந்த உலகம் பூந்தாதிலே மயங்கிக் கிடக்கும் வண்டுகளைப் போல், மயங்கிக் கிடப்பதைக் கண்டேன்.

அந்த காட்சியைக் கண்ணாரக் கண்ட நான், ஒரு கணம் மெய் மறந்தேன்!

உன் தமிழ்ப் பற்றை மட்டும், அப்போது ஒருவன் பாட்டாகப் பாடினான்.