தபஸ் O 11
ஒரு தவலை மொள்ளுவதற்குள் உசிரே போய்த் திரும்பி வரது...” -
கோவில் நைவேத்திய சாமான்களில் அப்பா கவலையில்லாமல் திருடுவார். சிவசொத்து எனும் கவலையே கிடையாது. வீட்டுக் கவலைகூட கிடையாது. "அம்மாளு” கவலைதான்.
“அம்மாளுவுக்கு அது, அம்மாளுவுக்கு இது" என்று ஒவ்வொன்றிலும் கொஞ்சம் ஒதுக்கிவைத்துச் சின்ன மூட்டை கட்டுவார்.
"அம்மாளு யார் அப்பா?" என்று நான் வியப்புடன் கேட்பேன்.
'உனக்கென்ன அதைப்பத்தி?' என்று முதுகில் அறைவார்.
அவரிடமிருந்து அம்மா என்னை அணைத்து ஒரு அறையில் பிடித்துத் தள்ளுவாள். பிறகு அப்பாவும் அம்மாவும் சண்டை போடுவார்கள்.
"மானம் போறதே. நம்ப சந்தி நம்ப பிள்ளை கிட்டக் கூட சிரிக்கணுமா?" என்று அம்மா அழுவாள்.
"மூடு வாயை, கழுதை!” என்று அப்பா கர்ஜித்துவிட்டு கட்டின மூட்டையுடன் வெளியே போய்விடுவார்.
அப்பா வீட்டில் சாகவில்லை.
ஒருநாள் அம்மாளு வீட்டிலிருந்து அப்பாவின் பிணத்தைக் கொண்டு வந்தார்கள்.
அதற்கப்புறம் நான் தான் குருக்கள்.
அதற்கு முன்னாலேயும், அப்பா வீட்டிலோ ஊரிலோ இல்லாத போதும் அவருக்கு உடம்பு சரியில்லாதபோதும் நான்தான் குருக்கள்.
எனக்கு லிங்கத்தைக் கண்டால் அவ்வளவு பிடிக்கவில்லை.
ஆட்டுக்கல்லில் குழவியை வைத்தாற்போல்.