பக்கம்:அவள்.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220 லா. ச. ராமாமிருதம்


எனக்குத் தெரிந்து ராதைக்கு மூன்று ஆசைகள்.

அவளைக் காலையில் எழுப்பக் கூடாது.

அவள் செலவுக்குப் பணம் அவ்வப்போது முளைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அவளைக் கணக்குக் கேட்கக்கூடாது.

அவள் தங்கை செய்வதெல்லாம் அவள் செய்தாக வேண்டும்.

"ஒரு அசலாத்துப் பெண்ணைக் கழுத்தில் கயிற்றைக் கட்டி இழுத்துண்டு வந்துட்டா ஆயிடுத்தா? அவளைச் சந்தோஷமா வெச்சுக்க வேண்டாமா?"

"உங்க அம்மாவுக்குக் காரும், சினிமாவும்தான் முக்கியம். நான்கூட இல்லே" என்று நான் கேலி செய்தால் அதற்கும் பதில் வைத்திருப்பாள்.

"அப்படித்தான் இருந்துட்டுப் போகட்டுமே! ஊர் உலகத்தில் எல்லோரும் போகல்லியா, வரல்லியா? ஆம்படையான் செத்துப்போனவாள் எல்லாம் உடனே உடன்கட்டை ஏறிவிட்டாளா? நீங்கள் ஒரு பிள்ளை, உங்களை நம்பி உங்கம்மா வாழ்ந்தாப்போலே, நான் மூணுபேரை நம்பி வாழ்ந்திட்டுப் போறேன். மூணு பேரில் மூணுபேருமா பொல்லாதவனாயிருப்பான்கள்? உங்களை நம்பி என்ன கண்டேன்?"

"நான்தான் வெகுளி. லோலோன்னு கத்தி நானே ஓயணும். எல்லாத்துக்கும் மெளனம்தான் மருந்துன்னு உங்கப்பா அழுத்தமாயிருக்கார். எனக்குத் தெரியாதா? ஆனால் இனி நான் ஒயமாட்டேன்."

எனக்கும்தான் தெரிகிறது.

ப்ரேமையின் சின்னமாய் ராதையின் பெயரை இவள் ஏன் கொண்டாள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/264&oldid=1497334" இலிருந்து மீள்விக்கப்பட்டது