பக்கம்:அவள்.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

த்வனி 251


"உண்மையும் பொய்போலும்மே பொய்போலும்மே! நானும் ஏதோ ஒரு யோசனைதான் நடத்துகிறேன்?"

"ஒரு வழியாகச் சொல், நீ விரும்புவதுதான் என்ன?”

"உங்கள் நினைவில் என் குரல் சதா ஒலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன். அந்த ஒலியின் துாண்டலாக உங்கள் எண்ணத்தில் எழும் உருவில், உங்கள் நெஞ்சின் ஓமகுண்டத்தில், அழிவற்ற இளமையில், ஜ்வலித்துக் கொண்டிருக்க விரும்புகிறேன்."

எனக்குப் பிடரி சிலிர்த்தது.

"என்ன குரூரமான ஆசை! எதிராளியின் வேதனை பற்றி நீ கொஞ்சமாவது நினைத்தாயோ?”

"வாழ்க்கையின் எந்த மகத்தான சம்பவத்தில் குரூரம் இல்லை? உயிர் பிறக்கையில் தாய்க்கு இரக்கம் பார்க்கிறதா, பார்க்க முடியுமா? அதேபோல் உயிர் பிரிகையிலும் உடலின் வேதனையை அனுசரிக்கிறதா? இப்போது நம்மில் நேர்ந்து கொண்டிருப்பது என்னென்று நினைக்கிறீர்கள்? நம் முதுகுகளைப் பிளந்துகொண்டு நாம் புதிதாய்ப் புறப்பட்டுக்கொண்டிருக்கிறோம். சாகாவரம் அடைவது பின் எப்படி?"

Line cut—

அவள் பேச்சின் வேகத்தில், அந்தக் குரலில் கக்கிய ஆவியில் டெலிபோன் புகையாததுதான் ஆச்சரியம்.

என் நெஞ்சில்

குபீர்.

ஜ்வாலையில் குங்கிலியம் கமழ்ந்தது.

தலையை இரு கைகளிலும் பிடித்துக்கொண்டு நான் உட்கார்ந்திருந்தது இன்னும் நினைவிருக்கிறது.

மணி 4-50, 4-55, 4-57, 4-58 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அவள்.pdf/295&oldid=1497618" இலிருந்து மீள்விக்கப்பட்டது