12
ஆடும்
மேலக்குடி இருப்பிலும், பட்டாமணியம் வசிக்கும் கீழக்குடி இருப்பிலும் திருக் கார்த்திகை தீபங்கள் எரிந்தன என்றால், மாதா கோயிலை நடுவே வைத்து அதன் இரு மருங்கிலும் வரிசை அமைத்திருந்த கிறித்தவ உடையார்கள் பகுதியில் அகல் விளக்குகள் ஆண்டவனை நோக்கி எழுந்தன. ஊருணிக் கரையை அடுத்த முகமதியர் தெருவிலே எப்பொழுதும் மூடிக் கிடக்கும் வாசற்கதவுகள் அன்று அடித்த நெல்லில் அரிசி மணி உமியை விலக்கி நிற்பதைப் போல, சிறிதாகத் திறந்து கொண்டிருந்தன. வாசற்படியில், மாடத்தில், மாட்டுத் தொழுவத்தில் எல்லாம் சிட்டி விளக்குகள் ஒளி ஏந்திக் கொண்டிருந்தன.
பிள்ளையார் கோயிலில் சர விளக்கு; மாதா கோயிலில் மெழுகு விளக்கு; பள்ளிவாசலில் திரி விளக்கு, மாங்குடியில் மூன்று கிளைகளாகப் பிரிந்து செல்கின்ற மனித சமூகம் ஒளித் தேவனை வழிபடுவதற்காகச் சங்கமித்த போது இந்து இல்லை: இஸ்லாம் இல்லை.
ஒளி, ஒளி, ஒளி! இருந்தது ஒன்றுதான்: இருப்பது ஒன்றுதான்; இருக்கப் போவது ஒன்றுதான்! இருந்தது, இருந்தது. இருப்பது இருக்கிறது; இருக்கப் போவது இருக்கும்.
“மாவலியோ மாவலி, மண்ணு சிறக்கும் மாவலி!”
காய்ந்த பனம் பூவை மூட்டம் போட்டு வேக வைத்து, அதையும் அடுப்புக் கரியையும், உப்பையும் தூளாக்கி, சருகக் கூடான பீர்க்கங்காய் ஓட்டில் அதை வைத்துக் கெட்டித்து, பச்சைப் பனை மட்டையை மூன்று கீற்றுகளாக வகுந்து, அவை நடுவே கூட்டை வைத்து முடைந்து தயாரித்த மாவலிகளை, விடலைப் பையன்கள் ஊருணிக் கரையில் பாட்டுப் பாடிச் சுற்றிக் கொண்டிருந்தனர். மாவலிகள் சுழன்ற சுழற்சியிலும், மோதிய காற்றின் அழுத்தத்திலும், நட்சத்திரங்களைப் போன்ற ஒளிப் பூக்களைச் சிந்திய போது, வானத்து நட்சத்திரங்கள் அனைத்-