தீபம்
81
நல்லவன்தான் . வெளிச் சாவகாசமும், வாலிபக் கோளாறுமாக பெற்றோருக்கு அடங்காத பிள்ளையாக அவன் வளர்ந்து விட்டான்; நீ அவனை நல்லவனாக்கி விடு!…” என்று இதமாக மொழிந்தார் அவர்.
ராஜநாயகம் பேசிய கருத்து, அவளை இன்பம் அடையச் செய்தது. நாணம் கன்னங்களில் செம்பஞ்சுக் குழம்பை அப்ப, மனம் மெய் நிலையிலிருந்து நழுவி, அதற்கப்பாலுள்ள ஓர் உயர்ந்த நிலையில் சஞ்சரிக்க ஆரம்பித்தது.
மாட்டுக்குத் தீனி அரைக்கவும், நெல் குத்தவும், கழனிக்குக் கஞ்சி கொண்டு போகவும், கண்மாய்க் கரையில் ஓரணா மலிவுச் சவுக்காரம் போட்டு அடித்துத் துவைக்கவும், இடை கொள்ளாமல் பெருங்குடத்தில் நீரேந்தி வரவும், கேட்ட வார்த்தைகளுக்கு மட்டுமே பதில் சொல்வதோடு, அனாவசிய கற்பனைகளுக்கு இடம் கொடுக்காமலும் வளர்ந்திருந்த அந்த உரம் மிகுந்த பட்டிக்காட்டுப் பெண், இப்பொழுது சதா கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்க விரும்பினாள்…!
பொழுது அலர்ந்தது.
அழகி படத் தயாரிப்பாளர்களுக்காகப் போடப்பட்டிருந்த ராமாயணப் பின்னணி கொண்ட ‘ஸெட்’ ஒன்றில், அல்லி நாட்டியம் ஆடிக் கொண்டிருந்தாள்.
ராஜநாயகம் கூட. துணைக்கு வந்திருந்தார் என்றால், அல்லியின் பால் கொண்டுள்ள வாத்ஸல்யம் எத்தகையது?
“ஓ, கே!” என்றார் டைரக்டர்.
படப்பிடிப்பு முடிந்து வீட்டுக்கு வந்ததுமே, ராஜநாயகம் அருணாசலத்திடம் கண்டிப்பாகத் தெரிவித்து விட்டார்.
“அருணாசலம், அல்லியை நீ கல்யாணம் செய்து கொள்ளப் போகிறேன் என்றது. நிச்சயம்தானே?”