பக்கம்:ஆடும் பெருமானும் அளந்த நெடுமாலும்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான்

83

இங்கே. தங்கைக்கு ஏற்ற மணவாளன் கிடைத்துவிட்டார் என்ற பெருமிதத்தில் கொஞ்சம் எட்டி நின்றே கடைக் கணிக்கிறார் விஷ்ணு, இப்படி உருவாகி இருக்கிறது நான்கு சிலைகள், பார்வதியும் பரமசிவனும் ஒரே வார்ப்பில் உருவானவை. சீதேவியின் பீடமும், மற்றைய சிலை உருவங்களின் பீடமும் ஒன்றை ஒன்று பின்னிப் பிணைந்திருப்பதால், சிலைகளை எப்படி அமைத்துக் காண வேண்டும் என்பதில் சிரமமே இல்லை. இந்த நான்கு உருவங்களும் அளவில் சிறியவையே. எல்லாம் இரண்டு மூன்றடி உயரமே. ஆனால் அவை கலையுலகில் உயர்ந்திருக்கும் உயரத்திற்குக் கணக்கேயில்லைதான்.

இந்த நல்ல சிற்ப உருவங்கள் நாலும் இன்றிருப்பது தஞ்சைகலைக் கூடத்திலே, சென்று காண வசதி உடையவர்கள் சென்று கானட்டும். அதற்கு இயலாதவர்கள் படத்திலாவது கண்டு மகிழட்டும், கதையைப் படிக்கட்டும், கலையை உணரட்டும்.