உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆண்மை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய நந்தன்

49

ஜான் ஐயரவர்களுக்கு வந்து விட்டது பெரிய கோபம். “பறக் கழுதை! வீட்டை விட்டு வெளியே இறங்கு” என்று கழுத்தைப் பிடித்து, நெட்டித் தள்ளினார்.

மனமுடைந்த தானியேலுக்குப் பாழ் வெளியாகத் தோன்றியது உலகம். இந்த மன நிலைக்கு மதம்தானே சாந்தி என்கிறார்கள். கிருஸ்தவனாக இருந்த பொழுது, வேத புத்தகத்தை நன்றாகப் படித்திருந்தான். சுவாமியாராகப் போய் விட வேண்டுமென்று, கத்தோலிக் மதத்தைத் தழுவி, சுவாமியார் பரிட்சைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாவிஸ் பிரதராக (Novice Brother} Father ஞானப் பிரகாசம் மேற்பார்த்த மடத்தில், இரண்டு வருஷங்கள் கழித்தான். சுற்றி நடக்கும் அபத்தங்களும், சில சுவாமியார்களின் இயற்கைக்கு விரோதமான இச்சைகளும், மனதிற்குச் சற்றும் சாந்தி தராத இருப்புச் சட்டம் போன்ற கொள்கைகளும், அவன் மனத்தில் உலகக் கட்டுப்பாடே ஒரு பெரிய புரட்டு, என்ற நம்பிக்கைகளைக் கிளப்பி விட்டன.

அதனிடமும் விடை பெற்றுக் கொண்டு, திரு. ராமசாமிப் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டு விட்டான். அதிலே அவன் ஒரு பெரும் தீவிரவாதி. இப்பொழுது தோழர் நரசிங்கம் என்ற பெயருடன், தனக்குத் தோன்றிய உண்மைகளை, அதில் ஒரு பைத்தியம் பிடித்தது போல், பிரசாரம் செய்து கொண்டு வந்தான்.

ஒரு தடவை தகப்பனாரைக் காண, ஆதனூருக்கு வந்தான். பழைய எண்ணங்கள் குவிந்திருக்கலாம், அதைப் பற்றி எனக்குத் தெரியாது. அவனுக்கு இரண்டு உண்மைகள் தெரிந்தன. தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் இடையே எண்ணங்களில், செய்கைகளில், ஏன் எல்லாவற்றிலுமே, ஒரு பெரிய பிளவு இருக்கிறது என்பது ஒன்று. இன்னும் ஒன்று, தான் சென்ற பிறகு, தனக்கு ஒரு அழகான—பறைச்சிகளுக்கும் அழகாயிருக்க உரிமையுண்டு—தங்கை, பதினாறு பிராயத்தாள் இருப்பதையறிந்ததுதான்.

ஆனால், இவர்களை மனிதரின் நிலைமைக்குக் கொண்டு வர, எந்தப் பகீரதன் உண்டாகப் போகிறானோ என்ற மலைப்பு ஏற்-

4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஆண்மை.pdf/50&oldid=1694439" இலிருந்து மீள்விக்கப்பட்டது