பக்கம்:ஆண் சிங்கம்.pdf/135

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
ரொம்ப வேண்டியவர்


ஞானப்பிரகாசம் ஒரு எழுத்தாளர்.

அவர் எழுதினால், கதை கட்டுரைகள் ஏதாவது பத் திரிகைகளில் வந்தாலும் வரும்; வராமலும் போகும்.

அவர் எழுத்துக்கள் பத்திரிகைகளில் வந்தால் அவருக்கு ஏதாவது பணம் கிடைத்தாலும் கிடைக்கும்; கிடைக்காமலும் இருக்கும்.

எழுத்தாளர் ஞானப்பிரகாசத்தைத் தேடி ஒருவர் வந்தார். அவர் புதிதாகப் பத்திரிகை ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னார்.

‘நமக்கு வேண்டியவங்க நீங்க. உங்க உதவி எப்பவும் இருக்கணும். ஒவ்வொரு இதழுக்கும் நீங்க தயவு செய்து கதை அனுப்பணும். உங்களுக்குத் தெரியாதா என்ன! ஆரம்பத்திலே பணம் கொடுக்க முடியாது தானே! இருந்தாலும் உங்க விஷயத்தை நான் மறந்து விட மாட்டேன் ஸார்’ என்றார் மணிக்கணக்கிலே தொணதொணத்தார். போனார்.

ஞானப்பிரகாசம் கதை எழுதி அனுப்பத் தவறவில்லை.

பிரசங்கி ஒருவர் புதிதாகப் பத்திரிகை தொடங்கினார். ‘நம்ம எழுத்தாளர் ஞானப்பிரகாசத்துக்கு ஒரு கடிதம் எழுதுங்க, கட்டுரை வேனும் என்று கேட்டு என்றார்,

‘பணம்? அவர் பணத்துக்காகத் தானே எழுதுவார்?’ என்று ஒரு நண்பர் கேட்டார்.

‘ஞானப்பிரகாசம் நமக்கு ரொம்பவும் வேண்டியவர் ஐயா! நம்மிடம் அவர் பணம் கிணம் ஒண்னும் எதிர் பார்க்க மாட்டார். நீங்க கடிதத்தை அனுப்புங்க'

133