பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழர் பண்டை நாகரீகத்தின் நில இயல் அடிப்படை

15


ஆல்ப்ஸ் மலையின் இருபக்கத்தும் நிலவிய நாகரீகத்தையும் , ஆராயத் தொடங்கியபோதுதான், மனித நாகரீகத்தின் வளர்ச்சியில் அம்மக்கள் வாழும் சுற்றுச்சூழல் செலுத்தும் ஆட்சியின் இயல்பு உணரப்பட்டது. ஆகவே, முதல் இரு நாகரீகங்களும் அவ்வாறு பெயரிடப்பட்டன. மூன்றாவது இயல்பினைக் காட்டவல்ல இடப்பகுதி, யுரேஷியா எனப்படும் பிரிவுறாத ஆசிய ஐரோப்பியப் பெருநிலப் பரப்பின் வடபகுதியைச் சார்ந்தது. ஆகவே, மூன்றாவது நாகரீகம் அவ்வாறு பெயரிடப்பட்டது. தமிழ்ப்பெயர் சூட்டுவதாயின் மத்திய தரைக்கடல் நாகரீகம், நெய்தலாம். ஆல்ப்ஸ் மலைநாட்டு நாகரீகம் குறிஞ்சியாம். நார்டிக் நாகரீகம் முல்லையாம்.

மேற்கு ஐரோப்பிய நாடுகள் 19 ஆம் நூற்றாண்டில் முற்றிலுமாகத் தொழில்மயமாக்கப்பட்டு பண்டைக்காலத்து ஐரோப்பிய மக்களுக்கு ஆறும், அது ஓடும் பள்ளத்தாக்காம் நிலப்பரப்பும் செலுத்திய ஆட்சித்திறன் அறவே மூடி மறைக்கப்பட்டுவிட்டமையால், மிக மிக முக்கிய நாகரீக மாகிய மருதம் என அழைக்கப்படும் ஆற்றுவெளி நாகரீகம் அறவே புறக்கணிக்கப்பட்டு விட்டது. ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளில் பரந்து கிடப்பது போன்று ஐரோப்பாவில் பாலைவனம் எதுவும் இல்லை. அராபிய நாடோடி இனத்தவரின் நாகரீக இயல்பினைக் காட்டவல்லது பாலை வனம். மக்கள் இனப்பண்பாட்டு நிலை பற்றிய ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களின் கடைக்கண் பார்வையை, இது, ஒரு சிறிதே பெற்றுள்ளது.

மனிதன் பண்டு கடந்துவந்த நாகரீகத்தின் படிக்கட்டுகள் ஐந்து. அவையாவன: வேட்டையாடல், நாடோடி வாழ்க்கை, கால்நடை மேய்த்தல், கடல் மேற்சேறல், தொழில்மயமும் கலந்த உழவுத்தொழில் மேற்கோடல்: இவை முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதத் திணைகளுக்கு நிகராகும். ஒவ்வொரு நிலப்பிரிவையும் சார்ந்த, இயற்கை வளங்களின் இயல்புகள், அவ்வந் நிலத்துக்குரிய நாகரீக வளர்ச்சிக்குத் தூண்டுதலாய் அமைந்தன.