பக்கம்:ஆரியர்க்கு முற்பட்ட தமிழ்ப்பண்பாடு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழர் பண்பாடு


பாடிய பாக்கள், உள்ளது உள்ளவாறே எடுத்துக்காட்டிய அக்காலங்களுக்குக் கற்பனையில் பின்நோக்கிச் செல்லலாம். அந்தக் காலக் கட்டத்திலிருந்து, பாக்கள் எழுவதற்கு முற்பட்டதான ஒரு காலத்திற்குப் பின்னோக்கிச் சென்று, இந்தியர்கள், இந்நனிமிகு பழங்காலத்தில் நடத்திய வாழ்க்கைக் காட்சியை - மின்னலின் ஒளிக்கீற்றுக்கள் போல் அங்குமிங்குமாகக் காணக் கிடைக்கும் காட்சியைப் பெறலாம். நன்மிகப் பழங்காலத்தை, இவ்வாறு நுழைந்து பார்ப்பதன் மூலம், தென்னிந்தியர்களின் கி.மு. 2000 அல்லது அதற்கும் முற்பட்ட காலத்து வாழ்க்கை நிலையினைக் கண்ணெதிர் காணலாம் போல் காணலாம். அவ்வாறு செய்வதற்கு முன்னர் அந்நனிமிகச் சேய்மைக் கண்ணதாய பழங்காலத்தில் வளர்ச்சி வேகம், வானூர்தி , கம்பியில்லாத் தந்திகளின் காலமாம் இன்றைய வளர்ச்சி வேகத்திலும் மிகமிகக் குறைவு என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும். இன்றைய வாழ்க்கையின், மூச்சுவிடுவதற்கும் இடைவெளியில்லா விரைவான மாற்றமும் வழுக்குப் பனிப் பாறைகளின் ஆறு போலப் புலனாலும் உணர்ந்து கொள்ள இயலாப் பண்டைய நாட்களின் மெதுவான, சிந்தனைச் செயல்பாடுகளும் இருகோடித் துருவங்கள் போலும் வேறுபாடுடையன. ஆகவே, கி.மு. 2000இல் எது உண்மை நிகழ்ச்சியோ, அதுவே, அதனினும் நனிமிகவும் பிற்பட்ட பழங்காலத்திலும், உண்மை நிகழ்ச்சியாகும். எண்ணுதற்கும் அப்பாற்பட்ட அப்பழங்காலத்தில், மனிதன், ஏனைய உயிரினங்களைப் போலவே, முழுக்க முழுக்க, நில இயல் கூறுபாடுகளுக்குக் கட்டுப்பட்டே வாழ்ந்தான். அவன் வாழ்க்கை, பெரும்பாலும், அவனுடைய சுற்றுச்சூழல் நிலைகளுக்கு உடன்பாடான விளைவினதாகி, அவ்வகையில், இயற்கையின் கட்டுப்பாடுகளைக் கடக்கக் கற்றுக் கொண்டு, துருவப் பனிப்பாறைகளோடு வெற்றிகரமாகப் போரிடவும், வான்வெளியின் மேல்நிலைகளுக்குப் பறப்பதன் மூலம், நிலைத்து ஈர்ப்பாற்றல் விதிகளின் எல்லையைக் கடக்கவும் செய்யும் இன்றைய வாழ்க்கையோடு உளம் கொளத்தக்க மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.