பக்கம்:ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆணிமுத்துகள்

67



தன் குடும்பத்தை, அழித்துவிட வேண்டும் என்பதன்று. போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா? எனவே, பிறர்க்கு ஓரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டாலும் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர்கூடவா நன்றி பாராட்டமாட்டார்கள்? பிறர்க்கு உதவாதவனுடைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்ட வழியில் பொருள் ஈட்டியிருந்திருப்பானே யானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள்.

மேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும். வெள்ளம் எப்போதும் வருமா? ஆனால், நல்ல வழியில் ஈட்டி வாழ்வதோ, ஊற்றுநீரை நம்பி வாழ்வதுபோலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ? எனவே, நல்வழியில் பொருளீட்டி, நாலாபேர்க்கும் உதவி வாழ்வானுடைய குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும் என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே!

சிலர் இன்னொருவருடைய பொருளை எடுத்துத் தம்முடையதுபோல வழங்குவார்கள். ‘கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது’ என்றால் இதுதான்! இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர்போலத் தாங்கள் வழங்குவார்கள். ‘மாட்டைக்கொன்று செருப்புத் தானம் செய்வது’ என்றால் இதுவேதான்! இவ்விதம் பழிப்புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவை