பக்கம்:இந்தியக் கலைச்செல்வம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இந்தியக் கலைக் செல்வம்

புறக்கண் பார்த்ததையே வண்ண வண்ணச் சித்திரங்களாக எழுதிக் காட்டினர். ஆனால், தமிழனோ ஒவ்வொரு காட்சியையும், அகக் கண்ணால் கண்டு அதை இதய வெளியிலே எழுதிய பின்னர் தானே சுவரிலோ துணியிலோ தீட்ட முனைந்திருக்கிறான். ‘உயிராவணம் இருந்து உற்று நோக்கி. உள்ளக் கிழியில் உரு’ எழுதிய ஓவியர்களை நாவுக்கரசர் பாராட்டத் தவறவில்லை. எல்லா அருங்கலைகளையும் போல, சித்திரக்கலையும் தமிழ்நாட்டில் சமயச் சார்புடையதாகவே வளர்ந்திருக்கிறது. தெய்வத் திருவுருவங்களைத் தீட்டுவதிலேயே சித்ரீகர்கள் அக்கறை காட்டி வந்திருக்கின்றனர். இப்படி அருங்கலை வளர்ப்பதில் முன்னிற்கும் பெருமையை, அந்தப் பல்லவ மன்னர்களே தட்டிக் கொண்டு போய் விடுகிறார்கள். இந்திய நாட்டின் சித்திரக் கலைக்கு சிறந்த நிலையமாக அஜந்தா ஓவியங்கள் அந்தப் பழைய சாளுக்கியர்களால் உருவாக்கப்பட்டதை ஒட்டி தமிழ்நாட்டிலும் ஒரு அஜந்தாவை உருவாக்கியிருக்கிறான் பல்லவ மன்னன் மகேந்திரவர்மன், சமணனாக இருந்தவன் சைவனாக மாறுமுன் அமைத்த குடைவரையே தொண்டைமான் புதுக்கோட்டையை அடுத்த சித்தன்னவாசல். அக்குடைவரைக் கோயிலின் உள் மண்டபச் சுவர்களிலே உள்ள சித்திரங்கள் அழகானவை; விதானத்திலே சித்திரித்திருக்கும் சாமவ சரவணப் பொய்கை, சமணர்களது மோக்ஷ சாம்ராஜ்யம் என்றே கூறுகின்றனர். அங்குள்ள மகேந்திரவர்மனது வடிவிலோ ஒரு கம்பீரம். நடன மாதரது கோலங்களிலோ அழகு பொங்கும். இந்த மகேந்திர வர்மன் காலத்தியதே பனைமலைக் கோயிலும் அங்குள்ள கந்தர்வர்க

171