இயல் தமிழ் இன்பம்
241
இவ்வாறாக ஐம்பொறிகளால் பொருள்கள் அறியப்படுவதும் அதனால் உடம்பில் தோன்றும் குறிகளும் மெய்ப்பாடாகும் என்ற கருத்து மிகவும் எளிமையாகப் பெறப்படும். இதனால் தான், செய்யுளியலில், செய்யுளின் ஓர் உறுப்பாகிய மெய்ப்பாட்டை விளக்க வந்த தொல்காப்பியர்,
“உய்த்துணர்வு இன்றித் தலைவரு பொருளான்
மெய்ப்பா முடிப்பது மெய்ப்பாடாகும்”(204)
“எண்வகை இயல்நெறி பிழையா தாகி
முன்னுறக் கிளந்த முடிவினது அதுவே” (205)
எனக் கூறிப் போந்தார்.
பண்ணை
மெய்ப்பாட்டியலின் முதல் நூற்பாவிலேயே, மெய்ப்பாட்டை அறிமுகம் செய்யத் தொடங்கிய ஆசிரியர் தொல்காப்பியர், இந்த மெய்ப்பாடுகள் பண்ணையில் தோன்றுவன என்னும் பொருளில்,
“பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருளும்
கண்ணிய புறனே நானான் கென்ப”
என்று கூறியுள்ளார். பண்ணை என்பதற்குப் பேராசிரியர் தரும் விளக்கமாவது:- “முடியாடை வேந்தரும் குறுநில மன்னரும் முதலானோர், நாடக மகளிரின் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் காமம் நுகரும் இன்ப விளையாட்டு” என்பது. இதற்கு இளம்பூரணர் தரும் பொருளாவது: “விளையாட்டு ஆயம்” என்பதாகும். இதற்குத் தொல்காப்பியர் கூறியுள்ள பொருள் விளையாட்டு என்பது.
“கெடவரல், பண்ணை ஆயிரண்டும் விளையாட்டு” (22)
என்பது, தொல்காப்பியம் - சொல்லதிகாரம் - உரியியல் நூற்பா. கெடவரல் என்பது ஒருவகை விளையாட்டு. பண்ணை என்பது ஒருவகை விளையாட்டு.