பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

99

கணவன் இறந்தபோது தவிர வேறெந்தக் காலத்திலும் இவ்வளவு பெரிய துயர வெள்ளத்தில் மூழ்கியதில்லை. வருந்தியதில்லை.

ரங்ககிருஷ்ணன் முதல் சில தினங்களில் அனலிடைப் பட்ட புழுப்போல துடித்தான். பின்னால் தன் நினைவின்றிக் கட்டைபோல மயங்கிக் கிடந்தான். அவனுடைய வளமான பொன்நிற உடலில் அம்மை கோராமாக விளையாடியிருந்தது. கண்கள் கறுத்து வறண்டு தூர்த்த கிணறுகள் போல் விகாரமாகத் தென்பட்டன. ரங்க கிருஷ்ணனைப் பார்த்து அவன் மனைவி சின்னமுத்தம்மாள் கதறிய கதறலையும் பட்ட வேதனையையும் கண்டு கர்ப்பவதியான அவளுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதே என்று கவலையாயிருந்தது மங்கம்மாளுக்கு.

அதனால் சின்ன முத்தம்மாளை ரங்ககிருஷ்ணனின் அறைக்குள் வராமல் அவளே தடுக்கவும் தடுத்தாள்.

"நீ கர்ப்பிணி பூவும் வாசனையும் அலங்காரமுமாக அம்மை போட்டிருக்கிற இடத்துக்கெல்லாம் வரக்கூடாதம்மா" என்று சின்னமுத்தம்மாளைக் கடிந்து கண்டித்துக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள்.

மாமியாரோ கணவனைப் பார்க்க வரக்கூடாதென்றாள். கணவனைப் பார்க்காமல் இருப்பதற்குச் சின்ன முத்தம்மாளால் முடியவில்லை. இருதலைக்கொள்ளி எறும்பு போல் தவித்தாள் அவள். திரிசிரபுரம் அரண்மனையில் கடும் சோதனை நிறைந்த நாட்கள் தொடங்கின. அரண்மனையில் பகலிலும் இருள் சூழ்ந்தது. ஒருவர் முகத்திலும் களையில்லை. துயரம் சூழ்ந்த மெளனம் எங்கும் கனத்துத் தேங்கியிருந்தது. எங்கும் எந்தச் செயலும் நடைபெறாமல் அரண்மனைக்குள் எல்லாம் ஸ்தம்பித்துப்போய்விட்டன.

நாலாவது நாள் மாலை ரங்ககிருஷ்ணனுக்கு இலேசாக நினைவு வந்தது. பேசமுடியாமல் கழுத்திலும், கன்னத்திலும் கொப்புளங்கள். தாயை நோக்கிக் கண்ணிர் சிந்தியபடிமெளனமாக இருந்தான் அவன். வாயைத் திறந்து உதட்டை அசைத்தாலே வலி கொன்றது.