பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

199

சந்தேகத்தைத் தனக்குப் போதனை செய்த நண்பர்களிடமே அவன் கேட்டு விட்டான்.

"ஒருவேளை என் கோரிக்கையைப் பாட்டிமறுத்துவிட்டாலோ, கண்டிப்பாக முடியாது என்று பதில் சொல்லி விட்டாலோ, அப்புறம் என்ன செய்வது?"

"அவள் மட்டும் முடியாதென்று சொல்லட்டும். அதன் பிறகு நாங்கள் அடுத்த யோசனையைச் சொல்கிறோம். முதலில் நீங்கள் அவளிடம் போய்க் கேட்பதைக் கேட்டு விட்டு வாருங்கள்."

"நான் ஒன்றும் ஏமாளியில்லை. இதோ இப்போதே கேட்டு விட்டு வந்துவிடுகிறேன்" என்று ஆவேசத்தோடு புறப்பட்டான் விஜயரங்கன். அவன் முகம் சினத்தால் சிவப்பேறியிருந்தது. பார்வையில் கோபக்கனல் தெறித்தது. நெஞ்சில் பதற்றமும் படபடப்பும் நிறைந்திருந்தன.

அவன் தேடிச்சென்ற சமயம் அந்தப்புரத்தில் சில மூத்த தோழிப் பெண்களோடு அமர்ந்து தாயம் விளையாடிக் கொண்டிருந்தாள் ராணி மங்கம்மாள். விஜயரங்கன் புயல் போல் நேரே உள்ளே பாய்ந்தான். அவன் வந்த நிலைமையைப் பார்த்து மங்கம்மாளே தோழிப் பெண்களை விலகிச் செல்லுமாறு சைகை செய்தாள். அவர்கள் சென்றனர். அவனைத் தன் அருகே அமரச் சொல்லிப் பாசத்தோடும் பரிவோடும் அவள் அழைத்தாள். அவன் அமரவில்லை. வெறுப்போடு முகத்தைத் திருப்பிக் கொண்டான்.

"என்ன வேண்டும் விஜயரங்கா பாட்டியின்மேல் இன்று உனக்கு ஏன் இத்தனை கோபம்?"

"உங்கள் பக்கத்தில் அமர்ந்து அத்தைப் பாட்டிக் கதைகளைக் கேட்டுக்கொண்டிருப்பதற்கு நான் இன்னும் பச்சைக் குழந்தையில்லை பாட்டி!"

"உண்மைதான் உனக்கு வயதாகிவிட்டது. ஒப்புக்கொள்கிறேன்."

"நீங்கள் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளவிட்டாலும் அது உண்மையே பாட்டி! உங்களுக்கு எதுதான் நினைவிருக்கிறது?"