பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

200

ராணி மங்கம்மாள்

உங்களுக்கு மற்றவர்கள் வயதும் நினைவிருப்பதில்லை; உங்கள் வயதும் நினைவிருப்பதில்லை."

அவன் இந்த வார்த்தைகளைச் சொல்லுகிறவரை விளையாட்டாக ஏதோ பேசுகிறான் என்று நினைத்துக் கொண்டிருந்த ராணி மங்கம்மாளின் முகபாவம் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் இறுகியது. நெகிழ்ச்சி தவிர்ந்து கடுமையாக மாறியது. அவள் தலைநிமிர்ந்து விஜயரங்கனைக் கூர்ந்து பார்த்தாள். அவன் மெய்யாகவே அடக்கமுடியாத ஆத்திரத்தோடு தன்னிடம் வந்திருப்பது புரிந்தது.

"ஆத்திரத்தில் வார்த்தைகளை அள்ளிக் கொட்டி விடாதே விஜயரங்கா கொட்டிய வார்த்தைகளைத் திருப்பி மறுபடி எடுத்துக்கொள்ள முடியாது. யாரிடம் பேசுகிறோம் என்ன பேசுகிறோம் என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசு!"

"நல்ல ஞாபகத்தோடு தான் பேசுகிறேன் பாட்டி வயதாகி மூத்த பின்னும் ஆள வேண்டும் என்கிற பதவி ஆசையையும் வேறு ஆசைகளையும் விடமுடியாத மகாராணி மங்கம்மாளிடம்தான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பது எனக்கு ஞாபகமில்லாமற் போகவில்லை. நன்றாக ஞாபகமிருக்கிறது."

“நாக்கை அடக்கிப் பேசக் கற்றுக்கொள்."

"முதலில் உங்கள் வயதுக்குத் தகுந்த அடக்கத்தை நீங்கள்தான் கற்றுக் கொள்ளவேண்டும்."

"உன்னை வளர்த்து ஆளாக்கியதற்கு எனக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்."

"இப்படிப் பொய்ப் புலம்பல் புலம்பியே என்னை இனி மேலும் நீங்கள் ஏமாற்றிவிட முடியாது பாட்டி!"

"நீ என்ன சொல்கிறாய்? எதைச் சொல்கிறாய்? நான் எதற்காக உன்னை ஏமாற்ற வேண்டும்?"

"என்னை ஏமாற்றினால்தானே நீங்கள் தொடர்ந்து ஆளமுடியும்? என் தந்தையார் காலத்திலும் அவரை ஏமாற்றிக் கைப் பொம்மையாக வைத்துக்கொண்டு நீங்களே ஆட்சி நடத்தினீர்கள். இப்போதும் அதையே தான் செய்கிறீர்கள்."