பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10. ராஜதந்திரச் சிக்கல்

"கிறிஸ்தவர்களுக்கு வேறு இடங்களில் நிலம் ஒதுக்கிவிடுங்கள்" என்றே தொடர்ந்து வாதிட்டனர் கோயில்களை நிர்வகித்து வருபவர்கள். இனிமேல் எங்களை யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற இறுமாப்பு அவர்களிடம் இருப்பதைக் கண்டுணர்ந்திருந்த ரங்க கிருஷ்ணன், அவர்களைக் கேட்டான்.

"இதே நிலங்கள் உங்களுக்குச் சொந்தமாயிருந்து நீங்கள் எங்காவது வெளியேறிச் சென்றிருக்கும் போது அவர்கள் தங்கள் சிலுவைக் கோயில்களை அங்கே கட்டியிருந்தால் நீங்கள் திரும்பி வந்ததும் என்ன செய்வீர்கள்?"

தனது இந்தக் கேள்விக்கு அவர்கள் என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்பதை அவன் கூர்ந்து கவனித்தான். ஆனால் அவர்களது பதில் அவனுக்கு ஏமாற்றமளிப்பதாயிருந்தது! "அரசே! நாங்கள் வெளியேறிச் சென்றிருந்தாலும் எங்கள் நிலங்களை அவர்கள் அவ்வளவு சுலபமாகக் கைப்பற்றி அவற்றின் மேல் சிலுவைக் கோயில் கட்டிவிடலாம் என்று நினைக்கக்கூட முடியாது."

"ஏன் முடியாது?

"அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் தடுக்காமல் சும்மா விட மாட்டார்கள்."

"மிகவும் சரி அதே போல் அவர்களுடைய நிலத்தில் நீங்கள் ஆலயங்கள் கட்டும்போது அக்கம்பக்கத்திலுள்ளவர் ஏன் தடுக்கவில்லை?"

“தடுப்பதற்கு அக்கம்பக்கத்திலே அப்போது அவர்களில் யாருமேயில்லையே?"

"ஓகோ? ஓர் அநியாயத்தைத் தடுக்க முடிந்தவர்கள் நேரில் இருந்தால் ஒரு நீதி, இல்லாவிட்டால் வேறொரு நீதியா? வேடிக்கையாயிருக்கிறதே நீங்கள் சொல்லுவது?"