பக்கம்:இராணி மங்கம்மாள் (நாவல்).pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

ராணி மங்கம்மாள்

தொடர்ந்து இப்படியே நியாயமாக நடந்து கொள்ள வேண்டுமென்று அவனை மேலும் வாழ்த்தினாள்.

மிகச் சில தினங்களிலேயே கிறிஸ்தவர்களுக்கு உரிய இடங்கள் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பாதிரியாரும், கிறிஸ்தவ மக்களும் ரங்ககிருஷ்ணனைச் சந்தித்து அவனுக்குத் தங்கள் விசுவாசத்தைத் தெரிவித்தனர்.

இவை எல்லாம் முடிந்த பின் பட்டத்தரசி சின்ன முத்தம்மாள் மட்டும் ஒரு நாள் இதைப் பற்றி ரங்க கிருஷ்ணனிடம் பேசியபோது சிறிது வருத்தப்பட்டாள்.

"விக்கிரகங்களைத் தூக்கி ஆற்றில் எறியச் சொன்னீர்களென்று நம் குடிமக்களின் சிலர் உங்கள் மீது கோபமாயிருக்கிறார்கள். நீங்கள் அத்தனை கடுமையாகச் சொல்லியிருக்கக் கூடாது."

"மெய்யாகவே ஆற்றில் கொண்டு போய் எறியுங்கள் என்ற அர்த்தத்தில் நான் அப்படிச் சொல்லவில்லை. நியாயத்தைப் பாராமல் தாங்கள் பிடித்த 'முயலுக்கு மூன்றே கால்' என்று அவர்கள் பிடிவாதமாகப் பேசினார்கள். அதனால் தான் நானும் அப்படிப் பதில் பேசவேண்டியதாயிற்று."

"’ஒரு சொல் வெல்லும், மற்றொரு சொல் கொல்லும்’ என்பார்கள். நீங்கள் நினைத்ததையே இன்னும் இதமாகச் சொல்லியிருக்கலாம்."

"அவர்களது முரண்டும் பிடிவாதமும் மட்டுமே என்னை அப்படிப் பேசவைத்தன. தவிர இன்னொரு காரணமும் இருக்கலாம் முத்தம்மா! அவ்வப்போது நமது நண்பராகவும் எதிரியாகவும், சில வேளைகளில் நண்பரா எதிரியா என்று கண்டு பிடிக்க முடியாத நிலையிலும் இருக்கும் இரகுநாத சேதுபதி இந்தப் பிரச்னையில் எப்படி நடந்து கொள்கிறாரோ அப்படி நாமும் நடந்து கொண்டு நமது பேரைக் கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பது என்னுடைய கருத்து."

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லையே கொஞ்சம் புரியும்படியாகத் தான் சொல்லுங்களேன்."