356
அணி என்றும் பிறவாறும் கூறி இலக்கணந் தெளிவிக்கிறார்.
வெண்பா வகையுள் சவலை வெண்பாவென ஒன்றைக் குறிக்கும் இவர் “இது சவலை வெண்பாட்டு என்னை?
“நனியிரு குறளாய் நான்கடி யுடைத்தாய்த்
தனிவர லில்லது சவலைவெண் பாட்டே”
என இக் காலத்துள்ளோர் பெயரிட்டு வழங்கும் வேறுபாடென உணர்க. அன்றியும் மூதுரையுள்ளும் ‘அட்டாலும்... தரும்’ என்பதூஉம் இப் பாவென உணர்க” என்றுள்ளது (28).
சவலை வெண்பா இலக்கணம் இந்நூலாசிரியர் காலத்தே நூற்பாவுடன் கொள்ளப்படுவதாயிற்று என அறியலாம். இதனால் சிதம்பரச் செய்யுட் கோவையும் எடுத்துக்காட்டுத் தரலாயிற்று.
இராம காதையைச் சுருக்கித் தருகிறது ஒரு பாட்டு. அது, எண்சீர்க் கழிநெடிலடியான் வந்தது. அணி, வீரம் பற்றிய பெருமிதம்:
“தேனிலங்கும் பைந்தாம மாலை மார்பிற்
றெச ரதனன் மகவாகித் திண்கான் மேவி
வானிலங்கொள் ஏழுமரா மரமும் வாலி
மார்பகமும் இலங்கேசன் மவுலி பத்தும்
நானிலத்தன் றிழிதரவோர் வாளி தூவி
நன்னுதலா ளுடன்கூடி இளவல் என்போன்
தானிலங்கா புரம்புரப்பக் களித்த வென்றித்
தனுராமன் தனக்கடிமை தழைத்து ளாரே”
அடிமறி மண்டில ஆசிரியப்பாவுக்கு இவர் தரும் எடுத்துக்காட்டுகளுள் ஒன்று: