தமிழில் முதற் காவியம்
நற்றமிழ் மொழியில் இற்றை நாள் வரையில் தோன்றியுள்ள காவியங்கள் எண்ணற்றவை. அவற்றுட் பெருங்காவியங்கள் சிலவே. சிலப்பதிகாரம், மணிமேகலை, சிந்தாமணி, குண்டலகேசி, வளையாபதி யென்னும் ஐந்தனையும் ஐம்பெருங் காவியங்கள் என்று ஆன்றோர் சிறப்பாகக் குறிப்பர். அவற்றுள் ஒன்றாகிய சிலப்பதிகாரம் தமிழில் தோன்றிய முதற் பெருங்காவியமாகும். அது தோற்றத்தான் மட்டுமன்றி ஏற்றத்தானும் முதன்மை பெற்ற காவியமாகும்.
முத்தமிழ்க் காப்பியம்
இந்நூல் முதன் முதல் தமிழிலேயே ஆக்கப் பெற்றது. பிற மொழியினின்று மொழி பெயர்க்கப் பெற்ற வழிநூலன்று. இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் விரவப்பெற்ற இணையற்ற இனிய காவியமாகும். இடையிடையே உரைநடையும் மருவிய உயர்ந்த இலக்கியமாகும். ஆதலின் ‘முத்தமிழ்க் காப்பியம்’ என்று மூதறிஞர் போற்றும் ஏற்றமுடையது. நாடகத்திற்கு அமைய வேண்டிய இயல்பெல்லாம் நன்கமைந்த காவியமாதலின் ‘நாடகக் காப்பியம்’ என்றும் இதனை நல்லோர் ஏத்துவர்.
பாவலர் பாராட்டு
இந் நூலின் இனிமையில் மனத்தைப் பறிகொடுத்த உரிமைக் கவிஞராகிய பாரதியார்,
-“நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரம்என் றோர்மணி
யாரம் படைத்த தமிழ்நாடு”