202
இளங்குமரனார் தமிழ்வளம் - 19
குழந்தை என்னும் பொருளில் ‘பாப்பா' என்பது பெருவழக்காக உள்ளது.பார்ப்பு, பறவை இளமைப் பெயர். அப் பெயர் பாப்பு - பாப்பா என ஆயது. பெண் குழந்தை கண்‘பாவை' எனப் பெற்றோரால் பேணப் படுவதால் ‘பாவை' எனப்பட்டது. பார்வை > பாவை. பாவை நோன்பு, பாவை ஆட்டம் என்பன வழக்கில் உள்ளன.
இஞ்சி, மஞ்சள் முளைகள் பழநாள் தொட்டுப் ‘பாவை' என வழங்கப்பட்டன. அப் பெயர், இப் பட்டியில் இடம்பெறவில்லை.
குருளை ‘சிங்கக் குருளை' எனக் கம்பரால் ஆளப்படுகின்றது. சேர்க்கப்பட வேண்டிய ஒன்றாகின்றது அது. 'குட்டி' என்னும் பெயர் பெண் மக்கள் இளமைப் பெயராக வழங்கப்படுதல் எவரும் அறிந்தது. அது போல் ‘குட்டன்' ஆண்பாலுக்கு வழங்கப்படுதல் நாலாயிரப் பனுவலில் உண்டு. ‘என் மாணிக்கக் குட்டன்' என்பது அது. இப் பெயர்கள் சேரலத்தில் பெருவழக்காக உள்ளவை. குட்டியப்பா சிற்றப்பா; குட்டிப்பல் சிறியபல்; குட்டி சிறுமை ஒட்டு.
இவ்வாறு இவ் வியலை ஆய்தல் பெரும் பயன் செய்யும். இவ் வியலில் விடுபாடு உண்டு; இடை ப்பாடு உண்டு; முன்பின் தள்ளல் உண்டு; பொருந்தாச் சேர்ப்பும் உண்டு. மரபு காக்கவென்றே ஆக்கப் பட்ட அருமையமைந்த இவ் வியலில் உள்ள மரபுக் கேடுகள் பலப்பல. அவை தனியே ஆயப்பட்டுத் தனி நூலாக்கம் பெறுகின்றன, இங்கு இவ் வாழ்வியல் நோக்குக்கு ஏற்ற அளவில், குறிப்புகள் இடம்பெறு கின்றன என்பதைச் சுட்டிக்காட்டி மேலே செல்லலாம்.
“சொல்லிய மரபின் இளமை தானே
சொல்லுங் காலை அவையலது இலவே”
என்று முடித்த ஆசிரியர், ஓரறிவு முதல் ஆறறிவு வரை அமைந்த உயிரிகளைப் பற்றிக் கூறுகிறார்.
இருபதாம் நூற்றாண்டில், 'செடி கொடிகளுக்கு உயிர் உண்டு' என்பதை ஆய்ந்து உலகப் புகழ் பெற்றார் சர் சகதீச சந்திரபோசு. ஆனால், அவர்க்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தொல்காப்பியரால் காணப்பட்ட அவ் வுண்மை, தமிழரால் அறிவிக்கப்படாமலும், ஆராய்ந்து நிறுவப்படாமலும் அடங்கிக் கிடப்பதாயிற்று.
அறிவியல் விளக்கமாக அமைந்த இப் பகுதியை இன்றேனும் தமிழ அறிவியலார் பயன்கொள்ளல் கட்டாயத் தேவை. தமிழில் அறிவியல் சிறந்து விளங்கியமையை உலகுக்கு எடுத்துக்காட்டலும், தமிழ் மரபில் அறிவியல் நூல் யாத்தலும் அவர்தம் கடமையாம். இதற்கு ஓர் அறிமுகமாக எம்மால் 'தமிழில் அறிவியல்' என்றோர் சுவடி வெளிப்படுத்தப்பட்டுளதாம்.