பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

212

புயல்

பிளாஸ்டிக்கினால் படகுகள், பலவிதப் பைகள், வானொலிப்பெட்டிகள், தேநீர்க் கோப்பைகள், தொலைபேசி உறுப்புகள், இசைத் தட்டுகள், பல்வேறு வகையான விளையாட்டுச் சாமான்கள் செய்யப்படுகின்றன. எழுதும் பேனா முதல் மாபெரும் நீர்த்தொட்டிகள் வரை பிளாஸ்டிக்கினால் செய்யப்படுகின்றன.


பிளாஸ்மா : நம் உடலில் எப்போதும் ஓடிக் கொண்டிருக்கும் இரத்தத்தில் 45 விழுக்காடு இரத்த அணுக்களும் 55 விழுக்காடு பிளாஸ்மா எனும் நீர்மப் பொருளும் இருக்கின்றன என்பதை முன்பே கண்டோம் (பார்க்க : இரத்த அணுக்கள்).

பிளாஸ்மாவில் 92 விழுக்காடு நீர் உள்ளது. மீதமுள்ள 8 விழுக்காடு திண்மப் பொருட்கள் உள்ளன. பிளாஸ்மா இளமஞ்சள் நிறமுடைய நீர்மமாகும்.

பிளாஸ்மாவில் உள்ள திண்மப் பொருட்களையும் இரு வகையாகப் பிரிப்பர். அவை கனிமப் பொருள், கரிமப் பொருள் என்பனவாகும். கனிமப் பொருட்களில் கால்சியம், மக்னீசியம், இரும்பு, தாமிரம், சோடியம், பொட்டாசியம், பாஸ்பேட்டுகள் ஆகும். கரிமப் பொருட்களில் புரதப் பொருட்கள் மாவுப் பொருட்கள், யூரியா, கொழுப்பு, அம்மோனியா ஆகியனவாகும்.

பிளாஸ்மாவில் உள்ள புரதப் பொருட்கள் பல்வேறு விதமான பணிகளை ஆற்றுகின்றன. இதில் உள்ள ஃப்ரினோஜன் எனும் பொருள் இரத்தம் உறைய உறுதுணை புரிகிறது. அத்தோடு இரத்த அழுத்தம் சீரான நிலையில் அமையவும் உதவுகிறது. மற்றொரு புரதப் பொருளான காமாகுளோபுலின் உடலில் நோய் எதிர்ப்புப் பொருளாகப் பயன்படுகிறது. மற்றும் பிளாஸ்மா புரதங்கள் புரதச்சத்துக்களைச் சேமித்துப் பாதுகாக்கும் சேமிப்புக் களங்களாகவும் விளங்குகின்றன. இரும்பு, தாமிரம், ஹார்மோன் போன்றவைகளைத் திசுக்களுக்கு எடுத்துச் செல்லவும் புரதங்கள் பயன்படுகின்றன.

மொத்தத்தில் பிளாஸ்மாவானது ஆறுமூலம் போக்குவரத்து நடப்பதுபோல் உடலில் சீரணமான உணவுப் பொருட்களை திசுக்களுக்கு கொண்டு செல்லவும் திசுக்களிலிருந்து வெளிப்படும் கழிவுப் பொருட்களை சிறு நீரகத்கத்துக்குக் கொண்டு சேர்க்கவும் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவே பெரிதும் உதவுகின்றன நாம் உட்கொள்ளும் நோய் தீர்க்கும் மருந்துகளை நோய்ப் பகுதிகளுக்குக் கொண்டு செல்வதும் பிளாஸ்மாவேயாகும். உடலில் சுரக்கும் ஹார்மோன்களை உடலெங்கும் கொண்டு சென்று உடல் சீரான நிலையில் இயங்க உதவுகிறது. திசுக்கள் வெளிப்படுத்தும் கரியமில வாயுவை நுரையீரலுக்குக் கொண்டு செல்வதும் பிளாஸ்மாவே யாகும். பிளாஸ்மா தனக்கு வேண்டிய சத்துப் பொருட்களை நாம் உண்ணும் உணவிலிருந்தே பெறுகின்றன.


புயல் : புயல் உருவாவதற்கு அடிப்படை காரணம் வாயு மண்டலத்தின் போக்கில் திடீரென ஏற்படும் மாறுபாடுகளேயாகும். மழை, ஆலங்கட்டி மழை, பனிப்புயல், தூசிப்புயல் போன்றவை தோன்றுவதற்கும் இதுவே காரணமாகும்.

பெரும்பாலான புயல்கள் கடல்களிலேயே தோற்றம் கொள்கின்றன. கடலில் உருவாகும் புயல் கடல்நீரோடு இணைந்து எழும். நீர் சுழற்சியினால் உண்டாகும் இப்புயலால் நீர் சில சமயம் 1½ கிலோ மீட்டர் உயரம்வரை எழும்புவதுண்டு.

புயல் எல்லாக் கடல்களிலும் உருவாவதில்லை. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள வெப்ப மண்டலக் கடற்பகுதிகளில்தான் அதிகமாக உண்டாகின்றன. குறிப்பாக வங்காள விரிகுடாக் கடல், இந்து மாகடல், அட்லாண்டிக் மாகடல், தென்பசிபிக் மாகடல் ஆகியவற்றில்தான் புயல்கள் அடிக்கடி உண்டாகின்றன. இப்புயல் தரைப்பகுதியை எட்டும் போது இடி மழை உண்டாகிறது. சுழன்று வீசும் காற்றின் கடும்வேகத்தில் மரங்கள் வேரோடு வீழ்கின்றன; கட்டிடங்கள் இடிகின்றன. கடுமையான பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன. இப்புயல் பல கிலோமீட்டர். தூரம்வரை வீசி படிப்படியாக பலவீனமடைந்து மறையும்.

சில குறிப்பிட்ட பகுதிகளில் வெப்பக் காற்றின் நீண்ட நாக்கு குளிர்காற்றை ஈர்க்க விரைந்து நீளும். இதனால் வெப்பக் காற்றின் முனைப்பகுதி தாழ்ந்த காற்றழுத்தமண்டலமாக ஆகும். அதை நோக்கி காற்று விரைந்து வீசத் தொடங்கும். இதுவே பெருங்காற்றாகவும் பின்னர் புயலாகவும் வடிவெடுக்கின்றன. இப்புயற்காற்றின் மையத்தில் கண் போன்ற பகுதி உண்டு. இப்புயற் கண்ணை மையமாகக் கொண்டே புயல் உருவாகிறது.