பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29


ஆனால், முஸ்லிம் ஒருவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களை மட்டும் இறை தூதராக, இஸ்லாமிய மார்க்க வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டு விட்டால் மட்டும் அவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆகிவிட முடியாது. அவ்வாறு கருதுவதும் இஸ்லாமிய மரபு அன்று.

காரணம், ஒருவர் ஒரு முழுமையான முஸ்லிம் ஆக வேண்டுமெனில் அவர் நபிகள் நாயகம் (சல்) அவர்களோடு, அவர்கட்கு முன்னதாக மனித குலத்தை இறைவழியில் வழிநடத்த, எல்லாம் வல்ல அல்லாஹ்வால், முதல் மனிதரும் முதல் நபியுமான ஆதாம் (அலை) முதற்கொண்டு அனுப்பப்பட்ட மூஸா (அலை), ஈஸா (அலை) உட்பட ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம் நபிமார்களையும் அவர்கட்கு இறைவனால் அருளப்பட்ட அனைத்து வேதங்களையும் ஒப்புக் கொண்டால் மட்டுமே அவர் முழுமையான முஸ்லிமாக ஆக முடியும் என்பதுதான் அண்ணலார் வாக்கும் இஸ்லாம் உணர்த்தும் கோட்பாடுமாகும். இதையே,

“(நம்பிக்கையாளர்களே) நீங்களும் கூறுங்கள்! அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பெற்ற (இவ்வேதத்) தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப் முதலியவர்களுக்கும், இவருடைய சந்ததிகளுக்கும் அருளப் பெற்ற யாவற்றையும் மூஸாவுக்கும் ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும் மற்றைய நபிமார்களுக்கு அவர்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் விசுவாசிக்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்லவென்று) நாம் பிரித்துவிட மாட்டோம் அன்றி, அவனுக்கே நாங்கள் முற்றிலும் வழிபடுவோம்,” (2 136)

எனக் கூறி திருமறையாம் திருக்குர்ஆன் தெளிவுபடுத்துகிறது.