பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

கிருஸ்தவப் பாதிரியார் குழு நேரிடையாகப் பெருமானார் (சல்) அவர்கள் இருந்த பள்ளிவாசலுக்கே வந்து விட்டனர். நீண்டநேரம் அண்ணாலாரோடு உரையாடியபோதிலும் பேச்சு வார்த்தை முற்றுப் பெறவில்லை. மேலும், பல விஷயங்களைப் பற்றித் தொடர்ந்து பேசி தெளிவுபெற வேண்டியிருந்தது. இதற்கிடையே பாதிரிமார்கள் பிரார்த்தனை செய்வதற்கான நேரம் நெருங்கியது. அவர்கள் வெளியே சென்று பிரார்த்தனை செய்து விட்டு மீண்டும் திரும்பிவர விரும்பினர்.

இதையறிந்த பெருமானார் அவர்கள் “இரண்டு கடவுள்கள் இல்லை; ஒரே இறைவன்தான். அவனை எங்கிருந்தும் வணங்கலாம். நீங்கள் விரும்பினால் இப்பள்ளி வளாகத்தின் ஒரு பகுதியிலேயே உங்கள் கிருஸ்தவ சமயச் சடங்கு முறைகளோடு, நீங்கள் பிரார்த்தனை செய்து இறை வணக்கம் புரியலாம்.” எனக் கூறினார். அண்ணலார் மனப் பூர்வமாக அளித்த பிரார்த்தனை அனுமதி பாதிரிமார்களுக்குப் பேருவகை அளித்தது. அண்ணலார் அனுமதித்ததற்கிணங்க பாதிரிமார்கள் பள்ளிவாசல் வளாகத்தின் ஒரு பகுதியில் குழுமி, தங்கள் கிருஸ்தவ மதச் சம்பிரதாயப்படி, சடங்கு முறைகளோடு தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ந்தனர்.

நஜ்ரானிலிருந்து வந்திருந்த கிருஸ்தவப் பாதிரியார் குழுவினர் மாற்றுச் சமயத்தவர் எனத் தெளிவாகத் தெரிந்திருந்தும் பள்ளிவாசல் வளாகத்திற்குள்ளாகவே இறை வணக்கப் பிரார்த்தனை புரிய அனுமதித்த பெருமானாரின் பெருந்தன்மையும் பிற சமயச் சகிப்புணர்வும் வந்திருந்த கிருஸ்தவப் பாதிரிமார்களுக்கு அண்ணலார் மீது அளவிலா மதிப்புக் கொள்ளச் செய்துவிட்டது. இச்செயல் மூலமே இஸ்லாத்தின் பிற சமயக் கண்ணோட்டம்

6