பக்கம்:ஈரோடு மாவட்ட வரலாறு.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

ஈரோடு மாவட்ட வரலாறு


சென்னை அரசு அருங்காட்சியகத்தில் 1855 ஆம் ஆண்டு கண்காணிப்பாளராகப் பணிபுரிந்தவர் டாக்டர் பால்பர். அவர் ஆறு வட்டார அருங்காட்சியகங்களை ஏற்படுத்தினார். அவை கோயமுத்தூர், பெல்லாரி, கடலூர், மங்களூர், உதக மண்டலம், இராச முந்திரி ஆகிய இடங்களில் அமைந்தன.

அப்போது கோவை மாவட்ட ஆட்சித்தலைவராக விளங்கிய டாக்டர் ஸ்டோனி அவர்களின் பெருமுயற்சியால் முதலாவதாக வரலாற்றுச் சிறப்புமிக்க தொல்பொருள்கள் கோவை அருங்காட்சியத்திற்காகச் சேகரிக்கப்பட்டன.

டாக்டர் இராபர்ட் புரூஸ்புட் அவர்கள் கொங்குப் பகுதியில் அப்பணியை மேற்கொண்டார். புருஸ்புட் 1863 முதல் 1904 வரை இந்தியா முழுவதும் 45 பழைய கற்கால மக்களின் வாழ்விடங்களையும் 252 புதிய கற்கால மக்களின் வாழ்விடங்களையும் அவர்கள் விட்டுச் சென்ற பல விதமான கற்கருவிகளையும் கண்டுபிடித்தார்.

புரூஸ்புட் கண்டுபிடித்த புதிய கற்காலக் கருவிகளில் மிகவும் சிறப்புமிக்கதும் தொன்மையானதும் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் அவர் கண்டுபிடித்த புதிய கற்கால ஆயுதங்கள் ஆகும். (சேர்க்கை எண்கள் 194-201 வரை) 1887ஆம் ஆண்டு பர்கூர் மலையில் எட்டுப்புதிய கற்காலக் கருவிகளை அவர் கண்டுபிடித்தார்.

வழக்கமான ஆற்றுப்படுகைகளில் இவை கிடைக்காமல் சுண்ணாம்புக்கல் வகையில் உருவாக்கப்பட்ட இயற்கைக் குகைகளின் இடுக்குகளில் இவை கிடைத்தது மிகவும் சிறப்பானதாகும். தமிழ்நாட்டின் புதிய கற்காலக் கருவிகளின் காலத்தை நிர்ணயம் செய்ய ஈரோடு மாவட்டப் பர்கூர் புதிய கற்காலக் கருவிகள் பயனுடையவைகளாக இருந்தன.

இந்த எட்டுப் புதிய கற்கால ஆயுதங்களும் முழுமையாக முற்றுப் பெறாதவை, இவைகளை வெட்டும் கருவிகளாக உருவாக்க அவர்கள் முயற்சி செய்துள்ளனர். அவை பழைய கற்கால ஆயுதங்களாகக் கூட இருக்கலாம் என புரூஸ்புட் ஊகித்துள்ளார். பர்கூரில் கல் ஆயுதங்கள் தயாரிக்கும் பட்டறை இருந்துள்ளதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.