பக்கம்:ஈரோட்டுத் தாத்தா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24


அறிஞர் அண்ணாத் துரையென்றே உருவெடுத்து
   முதுமைக ளைந்(து) ஆரியத்தை
முறியடித்துச் சூழ்ச்சிகளைக் குழிபறித்துப்
   புதைத் தொழித்து முன்னேற் றத்தை
அறிய வைத்தார்! திராவிடத்தார் பழமைகளைத்
   தேறிவந்தே ஆட்சி செய்யும்
சிறப்படைந்தார்! வாழ்வடைந்தார் முதலமைச்ச
   ராயுமின்றுத் திகழு கின்றார்!

தமிழென்றால் புராணமெனும் நிலைமைதனை
   இடைக்காலத் தமிழ்ப்பா வாணர்
தமிழ்க்காக்கிக் கெடுத்ததெலாம் மறைத்தகவி
   பாரதிதா சன் புரட்சித்
தமிழ்க்கவியைப் புதுமையெலாம் சேர்த்தின்பம்
   தரும்பாடல் தமிழில் ஆக்கித்
தமிழ்ப்பெருமை வளர்த்தவனைத் தாத்தாவின்
   அறிவியக்கம் தந்த தன்றே!

நற்பார தியின் தாசன் பரம்பரையாய்ப்
   பலகவிஞர் நாட்டில் தோன்றிச்
சொற்களிலே உணர்ச்சியையும் எழுச்சியையும்
   கொட்டிவைத்துச் சொந்த நாட்டின்
முற்போக்குக் கெனக்கவிதை பெருக்கியின்பத்
   தமிழ்வளர்த்து முன்னேற்றத்தைக்
கற்பித்தல் எலாம்பெரியார் அறிவியக்கம்
   கண்டதனாற் கண்டதன்றே!