பக்கம்:உணர்ச்சி வெள்ளம், அண்ணாதுரை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

மேடைத் தமிழுக்கு இலக்கணம் வகுத்தவர் பேரறிஞர் அண்ணா. கோடையிலே இளைப்பாறிக்கொள்ள வகை கிடைத்த குளிர்தருவைப் போல—ஓடையிலே ஊறிவரும் தீஞ்சுவைத் தண்ணீர் போல — அவரது மேடைப் பேச்சு விளங்குகிறது.

தத்துவச் சிந்தனையும் தமிழ் விருந்தும் பண்பாட்டு நலனும் அவரது சொற்பொழிவில் மிதந்து வருவதை அனைவரும் அறிவர். அவரது உரை — பலரைக் கவிஞர்களாச்கியிருக்கிறது — இன்னும் பலரை நாடக ஆசிரியர்களாக்கியிருக்கிறது.

தமிழக அரசின் முதல்வராக அவர் பொறுப்பேற்ற பின்னர் — அவரது சொற்பொழிவைத் தமிழகம் மட்டுமல்ல இந்தியத் திருநாடே ஆவலுடன் கேட்கத் தொடங்கியுள்ளது. அயல் நாடுகளிலும் அவரது புகழ் பரவி வருகிறது.

அவரது நா — அசைந்தால் அது நாதத் தமிலாக மலருகிறது — இனிய சங்கீத அலையாக அது உருமாறி அனைவரையும் ரசனை உலகுக்கு அழைத்துச் செல்கிறது.

அவர் தொட்டுப் பேசாத துறையில்லை. அவரால் பேசப்படாத பொருள், ஒரு பொருளே இல்லை.

தமிழக முதல்வராக இருக்கும் பேரறிஞர் அண்ணா அவர்கள் அவ்வப்போது பல விழாக்களிலும்; பல திட்டங்களின் அறிமுக விழாக்களிலும் ஆற்றிய சொற்பொழிவுகளை எல்லாம் தொகுத்து ‘உணர்ச்சி வெள்ளம்’ என்ற தலைப்பில் நூலாக உலா வரச் செய்திருக்கிறோம்.

தமிழ்ச் சமுதாயம் இந்த நூலை வாங்கிப் போற்றிப் பாராட்டிப் பாதுகாக்கும் என்று மனப்பூர்வமாக நம்புகிறோம்.

15—1—69

அன்பன்
தமிழ்ப்பித்தன்