இது கதையல்ல; பதினைந்து நாட்களுக்கு முன்னே கடந்த உண்மைச் சம்பவம். ஆனால் பட்டணம் கையின் திறமையைத் தங்கள் சொந்த அநுபவத்தில் கண்டவர்களே இதை உண்மை என்று நம்புவார்கள்; மற்றவர்களுக்கு நான் எவ்வளவு வற்புறுத்திக் கூறினாலும் இது வெறும் கட்டுக் கதையாகத்தான் தோன்றும். நீங்கள் எப்படி முடிவு கட்டினாலும் சரி - விஷயத்தை நடந்தவாறே கூறி விடுகிறேன்.
நானும் என் மனைவியும், என் நண்பன் ஒருவனும் அந்தச் சம்பவத்தில் பங்கெடுத்துக்கொண்ட முக்கிய பாத்திரங்கள். இன்னும் இரண்டு மிகப் பிரதானமான பாத்திரங்கள் உண்டு. அவர்களில்லாமல் இந்தச் சம்பவமே நடந்திருக்க முடியாது; இராவணன் இல்லாமல் இராமாயணம் உண்டா? ஆனால் அவர்களே யாரென்று எங்களில் ஒருவருக்கும் தெரியாது; தெரிந்திருந்தாலும் இச்சம்பவத்தின் முடிவே வேறு விதமாக மாறியிருக்கும்.
எங்களுக்கு அவர்களைப் பற்றி ஒன்றும் தெரியாமற் போனாலும், அவர்களுக்கு எங்களைப் பற்றி நன்கு தெரியும் போலிருக்கிறது. அதுவே அன்று நடந்த சம்பவத்திற்கு முக்கியமான சாதகமாயும் அமைந்திருக்கிறது.
எனக்கும் என் மனைவிக்கும் சென்னை புதிது. சமீப காலத்தில்தான் இங்கே குடி வந்தோம். ‘பட்டணத்திலே அறம், பொருள், இன்பம் மூன்றும் கிடைக்கும்; ஆனால் வீடு மட்டும் கிடைக்கவே கிடைக்காது!’ என்று எனக்கு