பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 59



அவன், அமைத்த பாதைகள் பலப் பல!

அவன், வெட்டிய திருக்குளம் பலப் பல!

அவன் கட்டிய கோட்டைகள் பலப் பல!

அவன், ஆக்கித் தந்ததே அனைத்துப் பொருள்களும்!

அவன், படைப்புத் தொழிலில் வல்லவன்!

அவன் பழிபாவத்துக்கு அஞ்சாதாரிடம் பகடையானான்!

அவன், உழைக்கிறான்; உருக்குலைந்து போகிறான்!

அவன், உழுகிறான்; மற்றவர் உல்லாச புரியில் உலவுகிறார்கள்!

அவன். அறுத்துக் குவிக்கிறான்; மற்றவர் அள்ளிச் செல்கிறார்கள்!

அவன், ஏழ்மையில் உழல்கிறான்; எல்லாச் செல்வத்தையும் ஆக்கி அளித்து விட்டு!

அவன் ஆடை அணி தேடிடவில்லை; ஆடம்பரம் நாடிடவில்லை!

அவன், மேனி அழகு கூடிட, புனைவனவும் பூசுவனவும் தேடிடவில்லை!

அவன், உழைக்கிறான், உழைக்கிறான், உழைக்கத்தானே பிறந்தோம் என்ற உணர்வுடன்

அவன், தன்னைச் சுற்றி சீமானும் பூமானும் உலவிடக் காண்கிறான்; இவர்கள் இந்நிலை பெற்றது எதனால் என்று கேட்டிட முனைகின்றான் இல்லை!

அவன், கண் எதிரே மணி மாடங்கள் தெரிகின்றன; நமக்கு மண் குடிசைதானா? என்று கேட்டிடத் தோன்றவில்லை

அவன், உழைப்பால் உலகை வாழ வைத்திடும். உத்தமன்!

அவன், உழவன்! அவன், பாட்டாளி! அவன், ஏழை!