பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

iv

கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8

முடியரசன் :-

" காணாது ஈத்த இப்பரிசிலுக்கு யான்ஒர்
வாணிகப் பரிசிலன் அல்லேன் ......
.........
முற்றிய திருவின் மூவரே ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே”

என்னும் சங்கப் புலவர்களின் வைர வரிகளுக்குச் சான்றாகப் பெருமித வாழ்வு வாழ்ந்தவர். சலுகை போனால் போகட்டும்: என்றன் தமிழ் வெல்லட்டும், ஆண்ட தமிழர் உயரட்டும் எனப் போராடியவர். வளையா முடியரசர் வணங்கா முடியரசர்; ஆனால் தெய்வத் தமிழை வணங்கியவர். எந்தச் சபலத்துக்கும் முடிசாய்க்காத ஆண்மையாளர். இலக்கிய உலகில் சிங்கமென உலவியவர். இருபதாம் நூற்றாண்டின் கவிதையுலகில் புதுமை பூத்த மரபுக் கவிஞர்

அழகும், இனிமையும், புதுமையும் கொஞ்சிக் குலவும் கவிதைகள் படைத்துத் தமிழுக்குப் புதிய அணிகலன்களைச் சூட்டியவர். தமது கவிதைகள் மூலம் சமூக அநீதிகளை - மனிதரிடையே பேதங்களைக் கற்பிக்கும் ஏற்பாடுகளை - குருட்டுப் பழக்க வழக்கங்களைச் சாடியவர். மனிதநேயத்துக்கும் சமத்துவத்துக்கும் எதிரான கருத்துகளை எதிர்த்து அறிவுப்போர் நடத்தியவர். ஒப்புரவும் மனிதநேயமுமே தமிழரின் பண்பாடு என முரசறைந்தவர்.

தமிழை இகழ்வார் தன்னுயிர்ப் பகையாய், அயல்மொழி திணிப்பார் வல்வரவெதிர்த்துத் தொடுமொழிப் போரில் தும்பை சூடிய, குடியரசோச்சும் கொள்கை கொண்ட மொழியரசோச்சிய முதல் முடியரசன். தமிழ்த் தேசியக்கவி, தமிழுலகின் அபூர்வப் படைப்பாளி; செந்தமிழ் ஊற்று, பைந்தமிழ்ப் பொழில்; திராவிட நாட்டின் வானம்பாடி, தமிழ்நாட்டின் பாடுங்குயில்; அப்பாட்டுப் பறவையின் வாழ்க்கைப் பயணம் முழுவதும் தமிழே, உயிர்; கவிதையே மூச்சு.

ஆதித்தமிழரில் சாதிகள் இல்லை; பாதியில் புகுத்திய சாதியை ஒழிக்க ஓதினார் கவிதைகள்; ஒதியவாறே ஒழித்தார் வாழ்க்கையில் வள்ளுவ நெறியை வாழ்வில் நாட்டி, பெரியார் வழியை ஒளியாய்க் காட்டி, புத்தன் புகட்டிய பகுத்தறிவூட்டி, சாதி, சமய, சாத்திரம் அறுத்து, வாக்கின்படியே வாழ்ந்து காட்டி வரலாறானவர்.