பக்கம்:எக்கோவின் காதல்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

105

"அவன் தேர்தலுக்கு நிற்கவில்லை என்றுதான் சொன்னான். நமது தோழர்கள்தாம் அவனைக்கட்டாயப் படுத்தி நிற்கும்படி சொல்லியிருக்கிறார்கள்”.

"நிற்கட்டும் நிற்கட்டும்! அவனைத் தோற்கடிக்கா விட்டால்......”

மனோகரா மில் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் நன்மைக்காக ஒரு கழகம் நிறுவியிருந்தார்கள். அந்த மில் தொழிலாளர்கள்தாம் கிருஷ்ணனும் அவனால் குறை கூறப்பட்ட அர்ச்சுனனும். அர்ச்சுனன் மேடையில் நன்றாகப் பேசுவான். பிழை என்று பட்டதை அஞ்சாது எடுத்துக் கூறுவான். தொழிலாளர் நலனுக்கு எந்தெந்தத் துறைகள் முட்டுக்கட்டையாகத் தோன்றுகின்றனவோ அவற்றையெல்லாம் வன்மையாகக் கண்டிப்பான்; முற்போக்குக் கொள்கையுடையவன்.

கிருஷ்ணனும் தொழிலாளர் நலனுக்குப் பாடுபடுபவன் தான். ஆனால் பழமையில் மோகங் கொண்டவன். பதவியில் ஆசையுண்டு. அந்தப் பதவிப் பித்து இருப்பதால் பொறாமை எண்ணமும் வளர்ந்து வந்தது. முரட்டுத்தனமும் இயற்கையிலேயே உடையவன்.

அவர்களின் கழகத் தேர்தல் வந்தது. தேர்தலுக்குக் கிருஷ்ணன் நின்றான். மற்றவர்கள் வற்புறுத்தலால் அர்ச்சுனனும் நிறுத்தப்பட்டான்.

கிருஷ்ணன் கொள்கை வேறு. அர்ச்சுனன் கொள்கை வேறு. இந்தக் காரணங்களால் ஏற்பட்ட பொறாமையால் தான் கிருஷ்ணன் பழனியிடம் அர்ச்சுனனைப் பற்றிக் குறை கூறிக்கொண்டிருந்தான்.