வளர்ச்சி-மாற்றம் ◯ 83
பெருமுயற்சி எடுத்துக்கொண்டால் வர்க்கப் போராட்டம் இல்லாமலே கூட அமைதி வழியில் வளர்ச்சியைக் காண முடியும்.
தமிழக வரலாற்றில் நடைபெறும் ஒரு பெரிய விவாதம் மரபு-புதுமை என்பது. மரபு, புதுமைகளுக்கிடையே மோதல் இயல்பாக நிகழாது; நிகழவும் கூடாது. இன்றைய புதுமை, வளர்ச்சிக்குரிய வித்துக்கள் உள்ளடங்கியதாக இருப்பின் சமூகத்தால் அங்கீகரிக்கப் பெற்று மரபாக ஏற்றுக்கொள்ளப் பெறும்.
மரபு, புதுமைக்குத் தாய்! புதிய செடி பழைய வித்திலிருந்தே உணவை எடுத்துக்கொண்டு வளர்கிறது. அது போலப் புதுமைகள் பழைய மரபுகளிலிருந்தே ஊட்டத்தைப் பெற்றுப் புதுமைகளாகிப் பின் மரபுகளாகி வரலாற்றுக்கு அணி செய்கின்றன.
மரபை மறுத்து வரும் புதுமை, எளிதில் மக்கள் சமுதாயத்தில் கால் கொள்வதில்லை. மார்க்சியம் பழமையைக் கண்மூடித்தனமாக மறுப்பதில்லை. ஆயினும், மாமுனிவர் கார்ல்மார்க்ஸ் கண்ட புதுமைச் சமுதாயம் மக்களிடத்தில் பூரணமாகக் கால்கொள்வதற்குரிய காலம் இன்னமும் கனியவில்லை.
ஆதலால், பழமையில் புதுமைக்கும், வளர்ச்சிக்கும். மாற்றங்களுக்கும் ஆக்கம் தரும் பகுதிகள் உண்டு என்பதை உணர்ந்து, அவற்றை எடுத்துக்கொண்டு சமுதாயத்தை நடத்துவது எளிதில் வளர்ச்சியை அடைவதற்குறிய வழி.
ஒரு சமூகம் சிறந்து விளங்க வேண்டுமெனில், துறை தோறும் வளர்ச்சி ஏற்படவேண்டும். சமுதாயம் பொருளாதாரம், கல்வி, கலை முதலிய அனைத்துத் துறைகளிலும்