பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

சொல்லிப் பார்ப்பதிலே ஒரு மகிழ்ச்சி இருந்தது என் மகனிடத்திலே தீபஸ்தம்பம் என்றால் என்னப்பா அது என்கிறான்! லைட் ஹவுஸுக்கு பெயர் தீபஸ்தம்பம் என்றால், அவன் சிரித்து கலங்கரை விளக்கமா என்று கூறுகிறான். தீபஸ்தம்பம் என்றால் அவனுக்கு புரியவில்லை. கலங்கரை விளக்கம் என்றால் தான் புரிகிறது! இது நான் கற்றுக் கொடுத்தது அல்ல—காலம் கற்றுக் கொடுத்தது. இது எப்படி ஏற்பட்டது? இது தான் மறுமலர்ச்சி வாயிலாக ஏற்பட்ட மொழி உணர்ச்சி!

பதினைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படி ஒரு கூட்டம் நடைபெற்று, நண்பர் கோகுல கிருஷ்ணன் வரவேற்று பேசுகிற போது, எப்படி பேசியிருப்பார்?

மகாஜனங்களே! சகோதர சகோதரிகளே! உங்களை யெல்லாம் சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது பெரும் பாக்கியம். நான் தண்யனானேன்! இப்பொழுது உங்கள் மத்தியிலே ஸ்ரீமான் அண்ணாதுரை அவர்கள் பிரசங்கம் செய்வார் என்று கூறியிருப்பார்! இப்பொழுது சபை அவை—யாகிவிட்டது! நாடு அரசாகி விட்டது நாடு, விடுதலை, கிளர்ச்சி என்கின்ற சொற்கள் வழக்கில் வந்துவிட்டன!இப்படி வருமென்று யார் கண்டார்கள்! யாரும் நினைக்க வில்லை! இந்த மறுமலர்ச்சி ஏற்பட்டபின் சிலருக்கு அச்சம் ஏற்பட்டது! தூய தமிழ் இன்று வென்றுவிட்டது! நிலையாக நின்றுவிட்டது!

ஆகவே, துணிந்து நம்பிக்கையோடு தமிழை ஆட்சி மொழி யாக்க வேண்டு மென்று எடுத்துரைக்க வேண்டும். புதிய புதிய சொற்களை நாம் இலக்கியத்திலே இருந்து எடுத்தாள வேண்டும். புதிய சொற்கள் இலக்கியத்தில் நிரம்ப இருக்கின்றன. வழக்குமன்றங்களுக்கான சொற்கள் சிலப்பதிகாரத்தில் வழக்குரைப் பகுதியில் இருக்கின்றன! அரசாட்சிக்குரிய சொற்கள் மணிமேகலையில் இருக்கின்றன!