பக்கம்:எனது திருமணப் பரிசு, அண்ணாதுரை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இப்படி அழுகிறீர்களே ! அந்தக் காலத்திலே நாங்கள் எல்லாம் மணலைக் கொட்டி அதில் ஹரநமோத்து சிந்தம் என்று கைவிரலால் எழுதி முடிவதற்குள் கைவிரலிலுள்ள இரத்தம் எல்லாம் சுண்டியே விடும் என்று.

இவர்களில் யார் குறிப்பிடும் அந்தக்காலத்தை வைதீகர்கள் அந்தக்காலம் என்று கூறுகிறார்கள். நான் குறிப்பிடுகிற அந்தக்காலத்தையா? அல்லது எனது பாட்டனார் சொன்னாரே அந்தக் காலமா? அதைவிட அவரது தகப்பனார் கூறினாரே அந்தக் காலமா? எந்தக் காலத்தை இவர்கள் அந்தக்காலம் என்று கூறுகிறார்கள்? அந்தக் காலம் எது என்பதற்கு ஒரு நிர்ணயம் ஏற்படுத்தி விட்டுப் பிறகு. கூறட்டும் அந்தக்கால பழக்கங்கள் என்று. அதற்குப் பிறகு நல்லதா கெட்டதா என்பதைப் பற்றி பேசுவோம். அந்தக்காலம் எந்தக்காலம் என்பதைக் குறிப்பிட்டுக் கூறிடாமல் வெறும் அடிமூச்சுக் குரலால் அந்தக்காலம் அழிவதா? அந்தக்கால ஏற்பாடுகள் தொலைவதா? என்று உரத்துப் பேசுவதால் என்ன பயன்?

இன்று வெள்ளைக்காரன் கூடத்தான் பேசுகிறான். நாங்கள் அந்தக் காலத்தில் இந்தியாவை ஆண்டபோது என்ன செய்தோம் தெரியுமா? என்று இதைப்போலவே முஸ்லீம்களுந்தான் அந்தக் காலத்தில் இருந்த செல்வாக்கே செல்வாக்கு என்று முஸ்லீம்கள் பேசுகிறார்கள். 'அந்தக் காலத்தில் ஆண்ட விக்கிரமாதித்திய ராஜாவின் காலமே காலம்' என்று இந்துக்களும் பெருமையோடு பேசுகின்றனர். பௌத்தர்கள் அந்தக் காலத்தில் ஆண்ட அசோகனை நினைக்கிறார்கள். இப்படிப் பலரும் அந்தக் காலத்தைப்பற்றி பலவிதமாகப் பேசுகிறார்களே! பெருமைப் படுகிறார்களே! இதில் எதை அந்தக்காலம் என்று திட்ட வட்டமாக ஏற்பது? பின்பற்றுவது.

அந்தக்காலம் எது என்பதற்கு யாராலும் திட்டவட்டமான முடிவு கூறமுடியாது. நிர்ணயத்தையும் காட்ட முடியாது.