பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குன்னம் சிதம்பரம் பிள்ளை

79

கண்ணில் நீர் துளித்தது. அவர் மனம் ஸாம்பையரது வீணாகானத்தை அப்பொழுதும் கேட்டதென்பதை அவர் முகக்குறிப்பு விளக்கியது. “சங்கீதம் ஒரு தெய்விக வித்தை. அது யாவருக்கும் பூரணமாக வாய்ப்பது அரிது. அந்தக் கலை தெய்வ பக்தியோடு கலந்தால் நிறைவுற்று நிற்குமென்பதை ஸாம்பையரிடத்தில் நான் கண்டேன்” என்று சடகோபையங்கார் சொல்வார்.

வேறு பாடங்கள்

சடகோபையங்காரிடத்தில் வேறுபல கீர்த்தனங்களையும் கற்றுக்கொண்டேன். தமிழில் திருவேங்கடத்தந்தாதி. திருவேங்கடமாலை முதலியவற்றைக் கேட்டேன் அந்தப் பாடங்களை யன்றி வீட்டில் சூடாமணி நிகண்டு பன்னிரண்டு தொகுதிகளையும், மணவாள நாராயண சதகம், அறப்பள்ளீசுவர சதகம், குமரேச சதகம், இரத்தினசபாபதி மாலை, கோவிந்த சதகம், நீதி வெண்பா என்னும் நீதி நூல்களையும், நன்னூற் சூத்திரங்களையும் மனப்பாடம் செய்து தந்தையாரிடம் ஒப்பித்து வந்தேன்.

அத்தியாயம்—15

குன்னம் சிதம்பரம் பிள்ளை


ரியிலூரில் இருக்கையில் எனக்குக் கல்வியில் அபிவிருத்தி ஏற்பட்டதோடு விளையாட்டிலும் ஊக்கம் அதிகரித்தது. பிராயத்திற்கு ஏற்றபடி விளையாட்டிலும் மாறுதல் உண்டாயிற்று. அரியிலூரிலுள்ள பெருமாள் கோயில் வாசலிலும் உள்ளிடங்களிலும் நண்பர்களோடு விளையாடுவேன். படத்தை (காற்றாடியை)ப் பறக்கவிட்டு அதன் கயிற்றை ஆலயத்திற்கு வெளியேயுள்ள கருடஸ்தம்பத்திலே கட்டி அது வான வெளியில் பறப்பதைக் கண்டு குதித்து மகிழ்வேன். கோபுரத்தின் மேல் ஏறி அங்கும் படத்தின் கயிற்றைக் கட்டுவேன். தோழர்களும் நானும் சேர்ந்து ஒளிந்து பிடிக்கும் விளையாட்டில் ஈடுபடுவோம். கோயிலிலுள்ள மூலைமுடுக்குகளி லெல்லாம் போய் நான் பதுங்குவேன்.

தசாவதார மண்டபத்தில் வாமன மூர்த்திக்கு மேல் புறத்தில் ஓர் இடுக்கு உண்டு. அதில் நான் ஒரு முறை ஒளிந்துகொண்டேன். அந்த இடம் மிகவும் குறுகலானது. என் நண்பர்கள் நெடுநேரம்