பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அன்பு மயம்

201


“நான் வரும்போதே உன்னைப் பற்றித் தெரிந்துகொண்டேன். வரும் வழியில் மாயூரத்திலிருந்து யாரேனும் எதிரே வந்தால் அவரிடம் பிள்ளையவர்களைப் பற்றி விசாரிப்பேன். அவர்கள் சொன்ன பதில் எனக்குத் திருப்தியை உண்டாக்கிற்று. மாயூரத்திலிருந்து வரும் ஒருவரைப் பார்த்து ‘பிள்ளையவர்கள் சௌக்கியமாக இருக்கிறார்களா?’ என்று விசாரித்தேன். ‘அவர்கள் ஊரில் இருக்கிறார்களா?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். ‘அவரிடம் ஒரு பிராமணப் பையன் படிக்கிறானே! உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன். ‘ஆகா, தெரியுமே. பிள்ளையவர்களைப் பார்த்தவர்கள் அவர்களுடைய மாணாக்கர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளாமல் இருக்க முடியாதே. ஒவ்வொருவரையும் பற்றி வருபவர்களுக்குச் சொல்லி உத்ஸாகமூட்டுவது அவர்கள் வழக்கமாயிற்றே. இப்போது வந்திருக்கும் பிராமணப் பையனிடம் அவர்களுக்கு அதிகப் பிரியமாம். அப்பிள்ளை நன்றாகப் பாடல் படிக்கிறாராம். சங்கீதங்கூடத் தெரியுமாம். பிள்ளையவர்கள் அவரிடம் வைத்துள்ள அன்பு அவரோடு பழகுகிறவர்கள் யாவருக்கும் தெரியும்’ என்று சொன்னதைக் கேட்டு என் உள்ளம் குளிர்ந்தது உன் அம்மா உன்னைப் பார்க்க வேண்டும், பார்க்க வேண்டுமென்று துடித்துக்கொண்டிருக்கிறாள்” என்று என் தந்தையார் கூறினார்.

அன்னையின் ஆவல்

நாங்கள் சூரியமூலை போய்ச் சேர்ந்தோம். வீட்டிற்குள் சென்றேனோ இல்லையோ நேரே, “அம்மா!” என்று சொல்லிக்கொண்டே பிரசவ அறைக்கு அருகில் சென்றுவிட்டேன். உள்ளே இருந்து மெலிந்த குரலில், “வா, அப்பா” என்று அருமை அன்னையார் வரவேற்றார்.

“உன் தம்பியைப் பார்த்தாயா?” என்று அங்கிருந்த என் பாட்டியார் குழந்தையை எடுத்து எனக்குக் காட்டினார். நான் அந்தக் குழந்தையைப் பார்த்துப் பார்த்துச் சந்தோஷமடைந்தேன். அதே சமயத்தில் என் தாயார் அந்த அறையில் இருந்தபடியே என்னை நோக்கிச் சந்தோஷம் அடைந்தார்.

“சாமா, உன் உடம்பு இளைத்துவிட்டதே; வேளைக்கு வேளை ஆகாரம் சாப்பிடுகிறாயா? எண்ணெய் தேய்த்துக்கொள்கிறாயா?” என்று என் தாயார் விசாரித்தார்.

“எனக்கு ஒன்றும் குறைவில்லை. சௌக்கியமாகவே இருக்கிறேன்” என்றேன் நான்.

“என்னவோ, அநாதையைப்போலத் தனியே விட்டுவிட்டோம். ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்” என்று