பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

என் சரித்திரம்

“இங்கே இருப்பதில் எனக்கு ஆக்ஷேபம் ஒன்றும் இல்லை. விஜயதசமியாகிய இன்றைக்குப் பிள்ளையவர்கள் கையால் ஏதாவது புஸ்தகம் வாங்கிக்கொண்டால் நல்லதென்று தோற்றுகிறது. நான் மறுபடியும் வருகிறேன்” என்று விடைபெற்று, பிற்பகலில் பட்டீச்சுரத்தை நோக்கிப் புறப்பட்டேன். பட்டீச்சுரத்திற்கு மாலை நான்கு மணியளவுக்கு வந்து சேர்ந்தேன். என்னைக் கண்டவுடன்,. “ஏன் அதற்குள் வந்து விட்டீர்?” என்று ஆசிரியர் கேட்டனர்.

“இன்று விஜயதசமி; ஐயாவிடம் ஏதாவது ஒரு புஸ்தகம் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று எண்ணி வந்தேன்” என்றேன்.

‘கலி தீர்ந்தது’

உடனே ஆசிரியர் அங்கு வந்த ஒருவரிடம், அந்த வீட்டிலே பூஜையில் வைத்திருந்த ஏட்டுச் சுவடிகளில் ஒன்றை எடுத்து வரும்படி சொன்னார். அவர் அங்ஙனமே ஒன்றை எடுத்து வந்து பிள்ளையவர்களிடம் கொடுத்தார். அதை அவர் என்னிடம் அளித்தார். நான் அதை மிக்க ஆவலோடு பெற்றுக்கொண்டேன். “என்ன நூலென்று பிரித்துப் பாரும்” என்று அவர் கூறவே, நான் பார்த்தேன். அது நைடதமாக இருந்தது. “நைடதம் படித்தால் கலிபீடை நீங்குமென்று பெரியோர்கள் சொல்லுவார்கள். உமக்குக் கலி இன்றோடு நீங்கிவிட்டது. இனிமேல் கவலைப்பட வேண்டாம்” என்று ஆசிரியர் கூறிய பொழுது எனக்கு மயிர்க் கூச்செறிந்தது. நான் பலவிதமான கஷ்டங்களுக்கு உள்ளானதை அறிந்த அவர் என் மனத்தில் அவற்றால் துன்பம் உண்டாகியிருக்கும் என்பதை உணர்ந்திருந்தார். அதனால்தான் அன்று அவ்வாறு எனக்கு ஆறுதல் கூறினார். உண்மை அன்புடையார் சொல்லும் வார்த்தைகளுக்குப் பயன் இல்லாமற் போகுமா?

“மாயூரத்தில் ஐயாவிடம் முதலிற் பெற்றுக்கொண்டது நைடதந்தான். அப்பொழுதே இந்த மாதிரி எண்ணினேன்” என்று நான் சொன்னேன். பிறகு நைடதத்திலிருந்து சில செய்யுட்களை ஆசிரியர் முன்னிலையில் படித்தேன். அதனால் எனக்கு உண்டான திருப்தி மிக அதிகம். அதுவரையில் ஒவ்வொரு வருஷமும் விஜயதசமி வந்து போய்க்கொண்டுதான் இருந்தது. ஆனால் அந்த வருஷத்து விஜயதசமியில் நான் என் ஆசிரியர் கைப்பட ஒரு புஸ்தகம் பெற்றுப் படித்த பாக்கியம் கிடைத்தது. அதனால் அதற்கு ஒரு தனி விசேஷம் இருந்தது.