பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/294

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருவாவடுதுறைக் காட்சிகள்

269

ஸந்நிதானமென்றது ஆதீனத்தலைவராகிய ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை.

“இனிமேல் பாடங் கேட்க வரலாமல்லவா?”

“நான் காத்திருக்கிறேன்.”

“குருபூஜையானவுடன் மாயூரத்திற்குப் போவேன். அங்கே போனவுடன் பாடம் ஆரம்பிக்கலாம்” என்று ஆசிரியர் கூறியபோது என் உள்ளம் குளிர்ந்தது. பாடங் கேட்பதில் எனக்கு இருக்கும் ஆவலைப் புலப்படுத்துவதற்கு முன்பே பாடஞ் சொல்வதில் தமக்குள்ள சிரத்தையை அவர் புலப்படுத்தினார்.

நான் பிள்ளையவர்களுடன் இருந்து அங்கே நிகழும் சம்பாஷணைகளைக் கவனித்து வந்தேன். பல கனவான்கள் வந்துவந்து பேசிவிட்டுச் சென்றார்கள். ஐந்து மணியளவுக்கு ஆசிரியர் மடத்திற்குச் சென்றார். நானும் அவர் பின் சென்றேன். எதிரே வந்தவர்கள் யாவரும் அவரைக் கண்டவுடன் ஒதுங்கி நின்று முகமலர்ச்சியால் தம் அன்பை வெளிப்படுத்தினர். உட்கார்ந்திருந்த தம்பிரான்கள் அவரைக் கண்டதும் எழுந்து நின்று வரவேற்றார்கள். அங்கே குமாரசாமித் தம்பிரானும் பரமசிவத் தம்பிரானென்பவரும் இருந்தனர். அவர்கள் பிள்ளையவர்களோடு பேசிக்கொண்டே மடத்தின் கிழக்கே இருந்த குளத்தின் கரையிலுள்ள (இப்போது குளம் தூர்ந்துவிட்டது) கீழைச்சவுகண்டிக்குச் சென்று அமர்ந்தனர். எல்லோரும் தமிழ் சம்பந்தமாகவும் மடத்தின் சம்பந்தமாகவும் பல விஷயங்களைப் பேசியிருந்தனர்.

காசிக் கலம்பகம்

“இன்று நல்லநாள். ஐயாவிடம் நல்ல தமிழ்நூல் ஒன்றைப் பாடங் கேட்க வேண்டுமென்ற ஆசை உண்டாகிறது” என்று குமாரசாமித் தம்பிரான் சொன்னார்.

“கேட்கலாமே” என்று சொல்லவே, அவரும் பரமசிவத் தம்பிரானும் காசிக் கலம்பகம் கேட்க வேண்டுமென்றார்கள்.

“காசிச்சாமிக்கு முன் காசிக் கலம்பகம் நடப்பது பொருத்தமே” என்று ஆசிரியர் கூறினார்.

எனக்கு முதலில் விஷயம் விளங்காவிட்டாலும் பிறகு விசாரித்துத் தெரிந்துகொண்டேன். பரமசிவத் தம்பிரான் சில வருஷங்கள் காசியில் இருந்தவர். அத்தகையவர்களைக் காசிச்சாமியென்று அழைப்பது மடத்துச் சம்பிரதாயம்.