பக்கம்:என் சரித்திரம், உவேசா, 1990.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என் பாட்டனார்

15

சமையல் பண்ணுவதென்று போய்க் கேட்டு வா” என்று மீண்டும் அன்னையார் அனுப்புவார். நான் மறுபடியும் போய்த் தாத்தாவைக் கேட்பேன்.

அவர் ஆர அமர யோசித்துவிட்டு, “கத்தாரிக்காய் இருக்கா?” என்று கேட்பார். அதற்கு ஒரு தடவை ஓடிப் போய்க் கேட்டு வந்து பதில் சொல்வேன். “பிஞ்சா இருக்கா?” என்று அடுத்த கேள்வி போடுவார். அதற்கும் ஒருமுறை ஓடிப் போய் வருவேன்.

“அந்தக் கத்தாரிக்காயைச் சுட்டுட்டு...” சிறிது நிறுத்துவார்.

“தெரியறதா? அதை நன்னாச் சுட்டுத் தாளிச்சுக் கொட்டி. . .”

அவர் சொல்லும் வார்த்தைகளில் ஒவ்வொன்றுக்கும் ஹுங்காரம் செய்துகொண்டே இருப்பேன். இல்லாவிட்டால் அவர் பேச்சு மேலே போகாது.

“தாளிச்சுக் கொட்டறப்போ உளுத்தம் பருப்பைப் போட்டுடுவா; அதைப் போடச் சொல்லாதே. எண்ணெயை அதிகமா விடச் சொல்லாதே”

அப்போது மேலெழும் கோபத்தால் சிறிது நேரம் மௌனம் ஏற்படும். மறுபடியும் ஆரம்பிப்பார்:

“அதை அம்மியிலே வச்சு நன்னா ஓட்டி ஓட்டி ஓட்டி ஓட்டி அரைக்கணும்”

அந்த ‘ஓட்டி’ என்னும் சொல்லை அவர் பலமுறைசொல்லுவார். அப்படிச் சொல்லும்போது அவர் கைகளின் அபிநயத்தைப் பார்த்தால் உண்மையாகவே கத்தரிக்காய்த் துவையலை அரைப்பவர்கள் கூட அவ்வளவு சிரத்தை கொள்ள மாட்டார்களென்று தோற்றும்.

தாத்தாவின் வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு கொஞ்ச தூரம் போவேன். அதற்குள் மறுபடியும் அவர், “டே, இங்கே வாடா” என்று கூப்பிடுவார். ’‘நான் சொல்றது தெரியறதா? நன்னா ஓட்டி ஓட்டி அரைக்கச் சொல்லு. உளுத்தம் பருப்பை அதிலே போடவேண்டாம்’’ என்று மறுபடியும் எச்சரிக்கை செய்வார். நான் கேட்டுக்கொண்டு அப்படியே என் தாயாரிடம் சொல்லி விடுவேன்.

இப்படி என் பாட்டனாருக்குப் பிரியமான கத்தரிக்காய்த் துவையலின் பக்குவத்தைப் பற்றியும் வேறு விஷயங்களைப் பற்றி-